episode 2

Rani Govindh | 04 Nov 2025 | Share

கீழே கிடந்த ஸ்டேம்ப் பேப்பரை எடுத்து பார்த்தவள் அதில் எதுவும் எழுதாமல் இருப்பதை பார்த்து குழம்பி போனாள்.

“சார், இது.. இதுல எதுவும் எழுதலையே”

“ஓஹோ, உனக்கு எவ்ளோ கோடி சொத்து இருக்கு, ப்ளாங் பேப்பர்ல சைன் வாங்கி அத வேற நான் எடுத்துக்க போறேனா”

அவன் கேலியாக கேட்டாலும் அவன் கேட்பதிலும் உண்மை இருக்க தானே செய்கிறது, அவளிடம் அவ்வளவு பணம் இருந்திருந்தால் அவள் ஏன் இப்படி ஒரு நிலைமைக்கு வர போகிறாள்.

“அதில்ல சார்’

“இஷ்டம் இருந்தா சைன் பண்ணி பணம் எடுத்துட்டு போ, இல்லைன்னா நான் கொடுக்க வேண்டிய டூ லேக்ஸ் எடுத்துட்டு கிளம்பிட்டே இரு, என் மூட் ஸ்பாயில் பண்ணாத”

இந்த பணத்திற்காக தானே அவள் ஒரு அந்நியன் முன் ஆடையில்லாமல் இவ்வளவு நேரம் நின்றிருக்கிறாள், இவ்வளவு பெரிய காரியத்தை செய்து விட்டு அதற்கு பலன் இல்லாமல் போனால் திரும்பவும் அவள் எங்கு போய் யாரிடம் பணத்திற்கு நிற்க முடியும், அப்படியும் எங்காவது போனால் அவர்கள் கேட்க போகும் பிரதிபலன் இதை விட கொடியதாக தானே  இருக்கும். ஆனால் எதற்காக அக்ரிமெண்டில் சைன் கேட்கிறான், இதனால் ஏதாவது பிரச்சனை ஆகி விட்டாள். இப்படி யோசித்து குழம்பி கொண்டிருந்தளுக்கு ஸ்டேஷனில் இருக்கும் வெண்ணிலாவின் முகம் நினைவுக்கு வந்தது. அந்த இன்ஸ்பெக்டர் பார்வையே சரி இல்லை, அவனால் வெண்ணிலாவிற்கு ஏதாவது பிரச்சனை வந்து விட்டால், அவள் கல்யாணம் செய்து வாழ வேண்டிய பெண் ஆயிற்றே, தன்னை போல வாழ்கையை இழந்தவள் இல்லை. சரி இந்த ஒற்றை சைனால் அப்படி என்ன தான் ஆகி விட போகிறது, பார்த்து கொள்ளலாம் என்கிற மனநிலைக்கு வந்து விட்டாள்.

“சார், பேனா இருக்கா?”

“வாட்”

“சைன் பண்ண பென் வேணும் சார்”

அவள் கூறியதை கேட்டு அவன் நக்கலாக சிரித்த சத்தம் அவளுக்கு தெளிவாக கேட்டது. அவன் அவளை பற்றி என்ன நினைத்திருப்பான்? என்ன வேண்டுமானாலும் நினைத்து கொள்ளட்டுமே என்கிற மனநிலையில் தான் இளமதி இருந்தாள்.

அவன் பேனாவை தூக்கி அவள் முன் போட அதை எடுத்தவள் பேப்பரில் சைன் பண்ண போனாள்.

“வெயிட், அதுல நான் சொன்ன மாதிரி உன்னோட போன் நம்பர், அட்ரெஸ் இதெல்லாம் எழுதி எனக்கு முழு சம்மதம்னு ஒரு சைன் போடு”

அட்ரெஸ் எழுத மட்டும் அவளுக்கு பயமாக இருந்தாலும், அவள் இருப்பதே வாடகை வீடு, இந்த சைனை வைத்து கொண்டு அந்த வீட்டை கூட அவனால் எழுதி வாங்கி கொள்ள முடியாது, வேண்டுமானால் ஐந்து மாத வாடகை பாக்கியை அவனே கட்டி கொள்ளட்டும் என்று நினைத்து கொண்டு டீடைல்ஸ் எழுதி சைன் போட்டு விட்டாள்.

“அக்ரிமென்ட்ட அங்க வச்சிட்டு நீ கிளம்பலாம்”

அவன் கூறியது தான் தாமதம், விட்டால் போதுமென்று டேபிளின் மீது அக்ரிமென்ட் பேப்பரை வைத்தவள் பணத்தை முந்தானையில் மறைத்து கொண்டு ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து கிளம்பினாள். அதற்கு பிறகு அவன் நினைவு அவள் மனதை விட்டு போயே விட்டது போல் ஸ்டேஷனுக்கு போவதை மட்டுமே இலக்காக கொண்டு ஹோட்டலுக்கு வெளியில் வந்தாள்.

இப்போதைய அவள் பயம், மணி எட்டுக்கு மேல் ஆகி விட்டது, இரவு நேரமாக வேறு இருக்கிறது, பணத்தை யாரும் கவனித்து அதை திருடி விட கூடாது என்பது தான். ஜாக்கிரதையாக ஒரு ஆட்டோவை பிடித்தவள் நேராக ஸ்டேஷனுக்கு போக சொன்னாள்.

அவளுக்கு நல்ல நேரமோ என்னவோ அந்த ஆட்டோ டிரைவர் நல்லவராக இருந்தார்.

“ஏன்மா, ஏதாவது பிரச்சனையா? இந்நேரத்துல ஏன் ஸ்டேஷனுக்கு, எதுவா இருந்தாலும் சொல்லும்மா”

முதலில் அவரை பார்க்கும் போது அவளுக்கு பயமாக தான் இருந்தது, யாரையும் நம்பும் மனநிலையில் அவள் இருக்கவில்லை. உடனே அந்த டிரைவர் அவர் போனை எடுத்து அதில் இருந்த போட்டோவை காட்டினார்.

“இந்த போட்டோல இருக்கறது என் மனைவி குழந்தைங்க, இதோ இதுல என்னோட டிரைவிங் லைசன்ஸ், ஆட்டோவோட லைசன்ஸ் எல்லாமே இருக்கு, நான் ஒரு பொண்ண பெத்தவம்மா, அந்த அக்கறைல தான் கேட்கறேன், ஏதாவது பிரச்சனையா, இந்நேரத்துல ஹோட்டல்ல இருந்து வெளிய வந்து நேரா ஸ்டேஷன் போகணும்னு சொல்ற, அதுவும் அது பணக்காரங்க மட்டுமே  தங்குற ஹோட்டல், அங்க ஏதாவது நடந்துச்சா, எவனாவது வம்பு பண்ணானா? இந்த நேரத்துல ஒத்தைல நீ ஸ்டேஷனுக்கு போனாலும் அங்க உனக்கு என்ன நடக்கும்னு சொல்ல முடியாது, அதனால தான் கேட்கறேன், பயப்படாம என்கிட்ட சொல்லும்மா, என்னால முடிஞ்ச உதவிய கண்டிப்பா செய்றேன்”

அவர் வார்த்தையில் இருந்த அக்கறையை அவளால் உணர முடிந்தது, உண்மையான அக்கறையை நீண்ட நாளுக்கு பிறகு உணர்ந்ததாலோ என்னவோ அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

“அழாதம்மா, உன் அண்ணனா நினச்சி என்ன நடந்ததுன்னு என்கிட்ட சொல்லும்மா’

“அது வந்து.. என் தங்கச்சி காலேஜ் படிக்கிறாண்ணா, நல்லா படிப்பா, ரொம்ப நல்ல பொண்ணு தான், காலேஜ் விட்டா வீடு, வீடு விட்டா காலேஜ், அந்த அளவுக்கு கரெக்ட்டா இருப்பா, குடும்ப கஷ்டம் உணர்ந்து படிக்கிற பொண்ணு”

“சரிம்மா, உன் தங்கச்சிக்கு என்ன ஆச்சி, அந்த ஹோட்டலுக்கு  உன் தங்கச்சிய பார்க்க தான் போனியா”

“இல்ல, இல்லண்ணா. என் தங்கச்சி இப்போ ஸ்டேஷன்ல இருக்கா” என்று அழுதபடி கூறினாள்.

“ஸ்டேஷன்லயா, ஏன்மா என்ன ஆச்சி, ஏதாவது தப்புகிப்பு”

“ஐயோ அப்படிலாம் இல்லண்ணா, அவ பண்ண ஒரே தப்பு, ப்ரெண்டுகள நம்பி பர்த்டே பார்ட்டிக்கு போனது தான், என்கிட்ட சொன்னா நான் விட மாட்டேன்னு எனக்கு தெரியாம போனது தான் அவ பண்ண பெரிய தப்பு, அந்த பார்ட்டில போதை பொருள் பயன்படுத்தி இருக்காங்களாம்,, பொண்ணுங்கள வேற கூட்டிட்டு போயி பசங்க ஆர்பாட்டம் பண்ணிருக்காங்க. அங்க வந்த போலீஸ் அதுக்காக என் தங்கச்சிய அரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க”

“இது என்னம்மா அநியாயமா இருக்கு, இதுல உன் தங்கச்சி தப்பு என்ன இருக்கு”

“ஏழையா பொறந்துட்டாளே, அந்த ஒரு தப்பு போதாதா? மத்த பசங்க பணக்கார வீட்டு பசங்க, அவங்க எல்லாரையும் விட்டுட்டாங்க, என் தங்கச்சி பலிகடா ஆகிட்டா”

இளமதி சொன்னதை எல்லாம் கேட்டு அவர் பெருமூச்சி விட்டு கொண்டார்.

“இதான்மா பிரச்சனையே, தப்பு செய்யாட்டியும் ஏழை வீட்டு பசங்க தான் தண்டனை அனுபவிச்சாகணும், இதான் இப்போ எழுதாத சட்டம், அதிருக்கட்டும் இந்நேரத்துக்கு நீ ஸ்டேஷன் போய் என்ன பண்ண போற, அதுவும் தனியா”

இந்த கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. இதற்கு பதில் சொல்லவேண்டும் என்றால் அவள் கையில் இருக்கும் பணத்தை பற்றியும் சொல்லியாக வேண்டும், எட்டு லட்ச ரூபாய் பணத்தை கையில் வைத்து கொண்டு தனியாக வரும் பெண்ணை பார்த்தால் யாருக்காக இருந்தால் அட்வான்டேஜ் எடுத்து கொள்ள தானே தோன்றும், ஒருவேளை பணத்துக்கு ஆசைப்பட்டு ஏதாவது செய்து விட்டால், வெண்ணிலா வாழ்கையில் ரிஸ்க் எடுக்க இளமதி விரும்பவில்லை.

“இல்லண்ணா, தெரிஞ்சவர் ஒருத்தர் இன்ஸ்பெக்டர்கிட்ட பேசி பார்க்கறேன்னு சொன்னாரு, அவரு நேரா ஸ்டேஷனுக்கு வந்துடறாராம், அதான்”

அந்த நேரத்திற்கு வாய்க்கு வந்த பொய்யை அடித்து விட்டாள். இப்படி பேசி கொண்டே ஸ்டேஷன் வரை வந்து விட்டனர்.

“நீ போயிட்டு வர வரைக்கும் நான் வேணும்னா இங்கேயே இருக்கேன்மா, திரும்ப ஆட்டோக்கு எங்க போய் தேடுவ”

அவருக்கு கண்களாலேயே நன்றி சொல்லி விட்டு குழந்தையை பொத்தி பாதுகாப்பது போல முந்தானையில் மறைத்து வைத்திருந்த பணத்தை பொத்தி எடுத்தபடி ஸ்டேஷனுக்குள் சென்றாள்.

அங்கு இன்ஸ்பெக்டர் இருக்கவில்லை, ஏட்டு ஒருவர் தான் இருந்தார். அவர் முன் இளமதி பாவமாக போய் நின்றாள். அவர் எதோ அவளிடம் சொல்ல வந்தார்.

“இன்ஸ்பெக்டர் சார் இருக்காரா சார்? பணம் கொண்டு வந்தா என் தங்கச்சிய விடறேன்னு சொன்னாரு, அவர் கேட்ட மாதிரி பணத்த எடுத்துட்டு வந்திருக்கேன் சார்”

முந்தானையில் வைத்திருந்த பணத்தை எடுத்து காட்டினாள். அந்நேரம் பார்த்து ஸ்டேஷனுக்கு வந்த si பணத்தை பார்த்ததும் பாய்ந்து வந்து பணத்தை பிடுங்காத குறையாக வாங்கி கொண்டார்.

“சார் ரவுண்ட்ஸ் போயிருக்காரு, நீ அப்படி போய் உட்காரு, அவரு வந்ததும் கூப்பிடறேன்”

பணத்தை வேறு si வாங்கி கொண்டதால் இளமதிக்கு அடுத்து என்ன நடக்குமோ என்கிற பயம் அதிகமானது.

“ஒருவேள இன்ஸ்பெக்டர் வந்த பிறகு அவர் கையிலேயே கொடுத்திருக்கணுமோ, இவரு வாங்கிட்டு இல்லன்னு சொல்லிட்டா என்ன பண்றது, எனக்கு ஏன் இப்படிலாம் தோணுது”

இளமதி இப்படி யோசித்தபடி ஸ்டேஷன் வாசலில் இருந்த ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டிருக்க உள்ளே இருந்த ஏட்டு டீ வாங்க வெளியில் வந்தது போல் அவள் அருகில் ப்ளாஸ்கை வைத்து கொண்டு வந்து நின்றார்.

“நான் சொல்றத மட்டும் காதுல வாங்கிக்கோ, என்ன பார்க்காத, அப்படியே டீ குடிக்க போற மாதிரி எதுத்தாப்புல இருக்க காபி பாருக்கு வாம்மா, நான் உன்கிட்ட சில விஷயம் பேசணும்”

“அது பணம், பணம் உள்ள’

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல, நான் முன்னாடி போறேன், ரெண்டு நிமிஷம் கழிச்சி நீ அங்க வா”

இப்படி சொல்லி விட்டு அவர் போகவும், என்னவாக இருக்கும், ஒருவேளை வெண்ணிலாவை வெளியே விடுவதில் ஏதாவது பிரச்சனை இருக்குமா என்று பயந்து கொண்டே எப்பொழுது ரெண்டு நிமிஷம் ஆகும் என்று காத்திருந்தாள். ரெண்டு நிமிசம் ஆனதும் அவள் எழுந்து நிற்க அந்த நேரம் பார்த்து si வந்து விட்டான்.

“எங்கம்மா கிளம்பிட்ட, சார் வந்துடுவாரு”

“அது, அது இல்ல சார், ஆட்டோல வந்தேன், அவரு நான் உடனே வந்துடுவேன்னு நின்னுட்டு இருப்பாரு, அதான் லேட்டாகும்னு சொல்லிட்டு வந்துடறேன்”

கனகச்சிதமாக ஒரு பொய்யை அவள் சொல்ல அதை அவனும் நம்பி விட்டான்.

போலீசிடமே பொய் சொன்னதாலோ என்னவோ அவள் கை கால் எல்லாம் வியர்த்து விட்டது, அங்கிருந்து பதட்டமாக வெளியே வந்தவள் வெளியே நின்ற ஆட்டோவை பார்த்தாள், ஆனால் டிரைவர் அண்ணாவோ போன் பேசியபடி அவளை கவனிக்காமல் இருக்க, அவள் ஏட்டு சொன்ன காபி ஷாப்புக்கு சென்றாள்.

அவளை பார்த்ததும் ஒரு ஓரமாக அழைத்து சென்ற ஏட்டு “நீ இங்க வரத யாரும் பார்க்கலையே”

“அது, si சார் கூப்ட்டு கேட்டாரு”

“நான் தான் வர சொன்னேன்னு சொல்லிட்டியா”

“இல்ல சார், அப்படிலாம் சொல்லல, ஆட்டோ வெயிட்டிங்ல இருக்கு, லேட்டாகும்னு இன்பார்ம் பண்ணிட்டு வரேன்னு சொல்லிட்டு வந்தேன்”

அதை கேட்ட பிறகு தான் அவருக்கு மூச்சே வந்தது.

“புத்திசாலித்தனமா தான் சொல்லிட்டு வந்திருக்க, ஆனா ஏன்மா முட்டாள்தனமா பணத்த கொண்டு வந்து கொடுத்த”

அதை கேட்டதும் அவளுக்கு என்னவோ போல் பகீரென்று ஆனது.

“என்ன சார் சொல்றீங்க, பணத்த கொடுத்தா தானே என் தங்கச்சிய விடுவேன்னு சொன்னாங்க”

“அதெல்லாம் சரி தான், ஆனா உன் தங்கச்சிய வெளிய கொண்டு வரதுக்கு நீ ரொம்ப பெரிய தப்ப பண்ணிட்டியேம்மா’

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே இளமதிக்கு புரியவில்லை. ஒருவேளை பணத்திற்காக மாடலிங் வேலைக்கு சென்றது இவருக்கு தெரிந்திருக்குமோ என்ற எண்ணம் தோன்ற, அதற்கு பிறகு அவர் முகத்தை பார்க்க கூட அவளுக்கு அவமானமாக இருந்தது. அவளுக்கு இன்னுமும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை என்று உணர்ந்தவருக்கோ சோர்வானது.

“உனக்கு இன்னுமாம்மா புரியல, இதெல்லாமே பக்கா ப்ளான், உன்ன அவமானபடுத்த ஒரு கூட்டம் போட்ட திட்டம் இதெல்லாம்”

இதை கேட்டதும் இளமதி அதிர்ச்சியாகி அவரை நிமிர்ந்து பார்த்தாள் .அதற்கு பிறகு அவர் சொன்ன தகவலை கேட்டவளுக்கு உயிரே போய் விட்டது போல் ஆகி விட்டது. இதற்கு மேல் அவள் உயிரோடு இருப்பதில் ப்ரோஜனமே இல்லை, மரணம் தான் தீர்வு என்னும் முடிவுக்கே வந்து விட்டாள்.

அப்படி என்ன உண்மையை அவர் சொன்னார்?

இளமதியை அவமானபடுத்த யார் திட்டம் போடுகிறார்கள்?

அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

  • Author
    kowsi5832
    May 13, 2026

    nice


    Author
    Rani Govindh
    May 13, 2026
    Thanks sis ☺

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *