கார்கால மேகங்களே

Ival Minmini | 09 Apr 2026 | Share

அதிகாலையில் பணிமூட்டமாய்…

லேசான அவள் ஸ்பரிசம் என் மீது பட இதயம் சிலிர்த்தது.வீசும் தென்றல் காற்று என்னை தூங்க விடாமல் சில்லென்று அடிக்க சன்னல் சத்தம் காதில் கேட்டது. நடுங்கிக் கொண்டு எழுந்து எட்டி பார்த்தேன் நெடு நாட்கள் கழித்து அவள் கொலுசின் மணி, தீராத சப்தமாய் சிதறி கொண்டிருக்க சின்ன சிரிப்புடன் மோதிக் கொண்டாள் அவள்… மர தூணில் தன்னை அறியாமல்! ஏனோ அப்போது என் சின்ன வயது கார்காலம் நினைவுக்கு வர மனமும் குளிர்ந்தது. அன்று நான் பள்ளியை விட்டு, முன்னமே வந்தேன் விளையாட வானம் சீராய் இல்லாது கருமை நிறைந்திருந்தது. நான் வீட்டு திண்ணையில் சாய்ந்து அமர்ந்திருக்க அன்போடு அவள் என் பக்கம் வர நான் வெட்கப் பட்டு தள்ளி சென்றேன். உடனே அம்மா வந்தாள், ‘வாடா’ என்று அழைத்து சென்றாள். திரும்பி வந்து அவளை கட்டி அணைக்க வேண்டும் என என் மனம் சொல்ல அம்மா பிடியில் இருந்து வர முடிய வில்லை. சட்டென்று அவளுக்கு கோவம் போலும், உடனே சென்று விட்டாள். நிறைய முறை அவள் வர நான் அவளிடம் செல்லாது ஓடி ஓடி செல்ல, கொஞ்சம் மாதங்கள் அவள் வருகை காணவில்லை. எதோ அது என்னால் தான் என்ற எண்ணம் என்னை வாட்டியது. நாட்கள் மாதங்கள் ஆக மாதங்கள் வருடமும் ஆக தொடங்கியது. அவ்வப்போது மீனாட்சி அம்மையிடம் வேண்டுவேன் அவள் வர, ஆனால் வறட்சி மட்டுமே வந்தடைந்தது. மக்கள் கவலை பட ஊர் வெந்து எரிந்தது. இன்று முதல் முறை பார்ப்பது போல் அழகு கொஞ்சினாள். அவளை கண்ட எல்லோரும் கண்ணீர் பூக்க சிரித்தனர், நானும் தான். ஏனோ என் அம்மா என்னை தடுக்க வில்லை இன்று! ஓடி சென்று அவளை கட்டி தழுவி முத்தமிட்டேன் அவளும் சாரலாய் என் மீது மோதி காற்றோடு என் மேல் விழுந்தாள். மனம் நெகிழ்ந்தது ஒரு வழியாய் மீனாட்சி கண் திறந்தாள் போலும் என்று!

                              ***முற்றும்***

© மின்மினி 

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.