முன்னுரை மற்றும் பாகம்-1

Vaishnavi Vijayaraghavan | 17 Apr 2026 | Share

காத்திருக்கிறேன் கண்ணாளா 


ஹீரோ – அவினாஷ்


ஹீரோயின் – ஹர்ஷிதா


அவினாஷின் குடும்பத்தினர்:

தாத்தா- பாண்டியராஜன்,

அப்பா -சிவராமன், 

அம்மா – நிர்மலா. 

அண்ணன்- அர்ஜூன் 

அண்ணி – ரஞ்ஜனி


ஹர்ஷிதாவின் குடும்பத்தினர்:

பெரியப்பா- ராஜகோபால்

பெரியம்மா – லக்ஷ்மி

அப்பா – வேணுகோபால்

அம்மா – விஜயா

அத்தை – யமுனா

மாமா – ராமு 

அத்தை மகன் – வேலன்


கதையில் வரும் சில டயலாக்குகள்:


ராஜகோபால்: “வேணு, வர சன்டே மாப்பிளை வீட்டுக்காரங்க வராங்க. ஹர்ஷிதா கிட்ட சொல்ல வேண்டாம்”


வேணுகோபால்: “ஆனா அண்ணா?”


ராஜகோபால் : “வேணு”


வேணுகோபால் : “ஓகே அண்ணா”


********


வேலன் தன் நண்பர்களிடம்,


“இவ்வளோ நாளா ஹர்ஷிதா தான் என் பொண்டாட்டின்னு நினைச்சு வாழ்ந்துகிட்டு இருக்கேன். இப்போ போய் அவளுக்கு வேற யாரையோ மாப்பிளைன்னு சொல்லி கூட்டிக்கிட்டு வரப்போறாங்க. இதெல்லாம் பார்த்துக்கிட்டு கம்முன்னு நிக்க என்னை சொம்பைன்னு நினைச்சிட்டாங்களா?”


வேலன் ஃபோன் அடித்தது.


“சொல்லுங்க மாமா”


வேணுகோபால்: “டேய், எங்கடா இருக்க? நம் ஹர்ஷியை பார்க்க மாப்பிளை வீட்டுக்காரங்க வர சன்டே வராங்க”


வேலன்: “கடைல தான் இருக்கேன் மாமா. சரிங்க மாமா. நான் என்ன பண்ணனும் சொல்லுங்க?”


அவனுடைய நண்பர்கள் அவனை பார்த்து,

“அட சீ, தூ” என்றார்கள்.


***************


அவினாஷ் : “எனக்கு ஒன் மன்த் லீவு கிடைக்குமா சார்?”


ஆஃபீஸர் : “என்ன அவினாஷ்? எப்படி நீங்க லீவு கேட்கறீங்க? நம்ம நேவி ரூல்ஸ் தெரிஞ்சு தான ஜாயின் பண்ணீங்க?”


அவினாஷ்: “தெரியும் சார். நான் இப்போ போகலைன்னா? என் காதலி செத்திடுவா” என்றான்.


***************


லக்ஷ்மி: “வர சன்டே மாப்பிளை வீட்டுக்காரங்க வராங்க ன்னு உங்க பெரியப்பா சொன்னாரு”


ஹர்ஷிதா : “ஓகே‌ பெரியம்மா”


விஜயா: “என்னடி ஓகே சொல்லிட்ட?” நீ இவ்வளவு ஈஸியா ஒத்துக்குவன்னு நான் நினைக்கில”


ஹர்ஷிதா: “அம்மா, பொண்ணு பார்க்க வர தான் ஓகே சொன்னேன். கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லல. என்னைக்கா இருந்தாலும் என் கழுத்துல தாலி கட்ட போறது அவினாஷ் தான்”


லக்ஷ்மி: “அதுக்கு ஒரு நாளும் உங்க பெரியப்பாவும் உன் அப்பாவும் சம்மதிக்க மாட்டாங்க”


ஹர்ஷிதா: “அவங்க சம்மதத்தோடு தான் நான் அவினாஷை கல்யாணம் பண்ணிக்குவேன்”


ஆச்சரியமாக பார்த்தார்கள் லக்ஷ்மியும் விஜயாவும்.


***************


ஹாய் ஃபிரண்ட்ஸ், இந்த அழகிய காதல் கதையை படித்து விட்டு உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள். கதையில் காதல், உறவு, வாழ்க்கை, குடும்பம், சோகம், கோபம், பாசம் என பல உணர்ச்சிகளைக் கொண்ட தொடர்.


“காத்திருக்கிறேன் கண்ணாளா”


– அ. வைஷ்ணவி விஜயராகவன்.


பாகம் – 1


நல்ல விஷயம்.


ஹர்ஷிதா ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது,


விஜயாவின் ஃபோன் அடித்தது. 

ஹர்ஷிதா ஸ்கூலில் இருந்து கால் வந்தது. ஃபோனை எடுத்து 


“ஹலோ” என்றாள் விஜயா.


“மேடம், நான் உங்க பொண்ணோட கிளாஸ் டீச்சர் பேசறேன்”


“சொல்லுங்க மேடம்”


“கொஞ்சம் ஸ்கூலுக்கு வந்து உங்க பொண்ணை கூட்டிக்கிட்டு போறீங்களா?”


“என்னாச்சு மேடம்?” என்று பதட்டமாக கேட்டாள் விஜயா.


“டென்ஷனாகாதீங்க மேடம். உங்க பொண்ணுக்கு ஃபர்ஸ்ட் பீரியட்ஸ் வந்திடிச்சு”


கண்கள் கலங்க,

“ அப்படியா? சரிங்க மேடம். நான் உடனே வந்து அழைச்சிட்டு போறேன்” என்று சொல்லி ஃபோனை வைத்தாள்.


“அக்கா, அக்கா?” என்று சொல்லி அழைத்தாள்.


“என்னம்மா?” என்றாள் லக்ஷ்மி.


“அக்கா, நம்ம ஹர்ஷி பெரிய பொண்ணா ஆயிட்டா. அவ மேம் கால் பண்ணாங்க. வாங்க போய் அழைச்சிட்டு வரலாம்”


“அப்படியா? ரொம்ப சந்தோஷமா இருக்கு. மொதல்ல அவ அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் கால் பண்ணி சொல்லு”


“சரிங்க அக்கா” என்றவள் அவர்கள் இருவருக்கும் கால் செய்து விஷயத்தை கூறினாள்.


இருவரும் சந்தோஷப் பட்டார்கள். 


“வேணு”


“சொல்லுங்க அண்ணா?”


“மதியம் கம்பனில இருக்கிற மீட்டிங் நீ அட்டன்டு பண்ணிடு. நான் நம்ம ஜோசியர் வீட்டுக்கு போய் ஃபங்ஷனுக்கு நாள் குறிச்சிக்கிட்டு வரேன். அப்புறம் நம்ம வீட்டுக்கு போகலாம்”


“சரிங்க அண்ணா”


மேனேஜரை கூப்பிட்டு, 


“மீட்டிங்ல அண்ணாவோட நேமை ரிமூவ் பண்ணிடுங்க” என்று சொன்னார் வேணுகோபால்.


ராஜகோபால் மற்றும் வேணுகோபால் இருவரும் சேர்ந்து அனைத்து விதமான கார்களையும் இம்போர்ட் எக்ஸ்போர்ட் செய்கின்றனர். ஹர்ஷிதா கார் ஏஜென்சிஸ் சேல்ஸ் அன்ட் சர்வீசஸ் என்ற பெயரில் நடத்தி வருகின்றனர்.


ராஜகோபால் மற்றும் லக்ஷ்மி இருவருக்கும் பதினெட்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் ஆன மூன்று வருடத்தில் நான்கு அபார்ஷன் ஆகிவிட்டது. அதன் பிறகு கர்ப்பப்பையில் பெரிய கட்டி இருந்ததால் அதை குணப்படுத்த முடியாது என்று சொல்லி வேறு வழியின்றி கர்ப்பப்பையை எடுத்து விட்டார்கள் டாக்டர்கள்.


அப்போது தான் வேணுகோபால் மற்றும் விஜயாவிற்கு திருமணம் நடந்தது. ஓராண்டு காலத்திலேயே ஹர்ஷிதா பிறந்தாள். 


முதலில் ஹர்ஷிதாவை எப்போதும் லக்ஷ்மியே வைத்து கொண்டு இருந்ததால் வருத்தப்பட்டாள் விஜயா. பின்னர் குழந்தைக்காக அவர்கள் இருவரும் எவ்வளவு ஏங்கி இருக்கிறார்கள் என்பதை வேணுகோபாலிடமிருந்து தெரிந்து கொண்ட பிறகு, அவளே ஹர்ஷிதாவை அதிக நேரம் லக்ஷ்மியிடம் கொடுப்பாள். 


தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் ஹர்ஷிதா தன் பெரியம்மா அறையிலேயே இருப்பாள். இவ்வாறு அனைவருடைய பாசமும் அன்பும் பெற்ற பெண் தான் நம் ஹீரோயின் ஹர்ஷிதா.


லக்ஷ்மி மற்றும் விஜயா வெவ்வேறு குடும்பமாக இருந்தாலும் சொந்த சகோதரிகள் போல பழகினார்கள்.


அவள் வயதிற்கு வந்துவிட்டாள் என்று தெரிந்ததும் அதை பெரிய விழாவாக கொண்டாட நினைத்தார்கள் நால்வரும்.


காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள் லக்ஷ்மி மற்றும் விஜயா. காரில் செல்லும் போது தங்கள் நாத்தனார் யமுனாவிற்கு கால் செய்தனர். 


“அப்படியா? ரொம்ப சந்தோஷம் அண்ணி. அண்ணா கிட்ட சொல்லி இவருக்கு கால் பண்ண சொல்லிடுங்க. அப்போ தான் என்னையும் வேலனையும் அனுப்பி வைப்பாரு. சரியான ஈகோ புடிச்ச மனுஷன்”


“யமுனா எங்களுக்கு தெரியாதா ராமுவை பத்தி. வேணு தம்பி கிட்ட சொல்லி ராமு கிட்ட பேச சொல்றோம்” என்றாள் லக்ஷ்மி. 


லக்ஷ்மி எப்போதும் தன் கொழுந்தன் வேணுகோபாலை ‘வேணு தம்பி’ என்று தான் அழைப்பாள்.


“எங்களுக்கு விஷயம் தெரிஞ்சதும் உனக்கு சொல்ல ஆசைப்பட்டோம். அதான்”


“சரிங்க அண்ணி, சரிங்க அண்ணி. சாயங்காலம் வேலன் வந்தவுடன் நாங்க வந்திடறோம். எப்போ தண்ணி ஊத்தனும்?”


“ஜோசியரை பார்த்து விட்டு சொல்றேன்னு உங்க அண்ணா சொன்னாரு”


“சரிங்க அண்ணி, பை” என்று சொல்லி ஃபோனை வைத்தாள் யமுனா.


ஜோசியரின் வீட்டில்.


“ரொம்ப அமோகமான நாள் இன்று. இன்னைக்கு ருது ஆகியிருக்கான்னா உண்மையிலேயே ரொம்ப அதிர்ஷ்டசாலி தான். அவ பிறந்த இடத்துலையும் சரி, கல்யாணம் ஆகி போற இடத்துலையும் சரி, ரொம்ப நல்லா இருப்பா. ஆனா அவ கல்யாணம் அவளோட விருப்பத்துக்கு தான் நடக்கும்” என்றார் ஜோசியர்.


“அப்படின்னா லவ் மேரேஜ்ன்னு சொல்றீங்களா?” என்றார் ராஜகோபால்.


“ஆமாம், ஆனா?”


“என்ன சொல்லுங்க ஜோசியரே”


“யாரையும் கஷ்டப்படுத்திட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிறவ இல்ல இந்த பொண்ணு. உங்க சம்மதத்தோடு தான் கல்யாணம் பண்ணிக்குவா”


“சரிங்க ஜோசியர். நாள் குறிச்சுக் கொடுங்க. இன்னைக்கு நாள் நல்லா இருக்கு தண்ணி ஊத்திடுங்க. ஒன்பதாம் நாள் புண்ணியாதானம் பண்ணிட்டு நலங்கு, புட்டு சுத்திரதுன்னு உங்க பழக்கம் என்னவோ அதை பண்ணிக்கோங்க”


“சரிங்க ஜோசியர்” என்று சொல்லி அவருக்கு தட்சணை கொடுத்து விட்டு கிளம்பினார் ராஜகோபால்.


தன் காரில் ஏறும் போது டிரைவரை வெளியே நிற்கச் சொல்லி விட்டு தன் மனைவி லக்ஷ்மிக்கு கால் செய்து ஜோசியர் சொன்னதை கூறினார். 


விஜயா ஸ்கூலுக்கு உள்ளே சென்றதால் லக்ஷ்மியும் தனியாக காரில் அமர்ந்து இருந்தாள்.


“லக்ஷ்மி, வேணு கிட்டயோ இல்லை விஜயா கிட்டயோ இந்த கல்யாண விஷயத்தை சொல்ல வேண்டாம்”


“ஆனா, எப்படிங்க சொல்லாம?”


“ நான் தான் இப்போதைக்கு சொல்ல வேணாம்னு சொல்றேன் இல்ல?”


“சரிங்க, அப்புறம் ஒரு விஷயம்”


“சொல்லு”


“நம்ம விஜயா வீட்டிற்கு சொல்லலாமா?”


“அதுக்கு ஒரு நாளும் வேணு ஒத்துக்க மாட்டான்”


“நீங்க சொல்லுங்க தம்பி கிட்ட. விஜயாவுக்கும் தன் குடும்ப ஆளுங்க வரணும்ன்னு ஆசை இருக்கும் இல்ல?”


“ஹூம்”


“முறைப்படி தாய்மாமன் தான் குடிசை கட்டனும்”


“எனக்கு புரியுது லக்ஷ்மி. ஆனா வேணு”


“நீங்க சொன்ன கண்டிப்பா உங்க தம்பி எதிர்த்து பேச மாட்டார்”


“சரி, பேசிப் பார்க்கிறேன். ஆனா அதுக்குள்ள நீ விஜயா கிட்ட சொல்லிடாத”


“சரிங்க, ரொம்ப தேங்க்ஸ். என்னை மாதிரி அனாதைக்குத் தான் குடும்பத்தோட அருமை தெரியும். யாரும் இல்லன்னா பரவாயில்ல. எல்லாரும் இருந்தும் இல்லன்னா. அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?”


“ஏய், எத்தனை முறை சொல்லியிருக்கேன் உன்னை அப்படி பேசாதன்னு. அனாதைன்னா அப்போ நாங்க எல்லாம் யாரு?”


“அச்சோ, நான் இப்போ சொல்லலங்க. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி சொல்றேன்”


“எதுவா இருந்தாலும் இன்னொரு முறை அப்படி சொன்ன. அவ்வளவுதான் பாத்துக்கோ”


“சரி, சரி, இனிமேல் சொல்ல மாட்டேன்”


“சரி வைக்கவா?”


“ஏங்க?”


“சொல்லு”


“அப்படியே உங்க தங்கச்சி வீட்டுக்காருக்கும் கால் பண்ணி சொல்லிடுங்க”


“ஹாங், சரி பை”


“பை” என்று சொல்லி ஃபோனை வைத்தாள் லக்ஷ்மி.


விஜயா ஹர்ஷிதாவை அழைத்து கொண்டு காரில் ஏறினாள். 


“பெரிம்மா” என்று அழுதுகொண்டே லக்ஷ்மியை கட்டிக் கொண்டாள் ஹர்ஷிதா.


“என் செல்லக்குட்டி இன்னைக்கு பெரிய மனுஷி ஆயிட்டா. இதுக்கு போய் யாராவது அழுவாங்களா?”


“ஆனா பெரியம்மா, அம்மா நான் பயந்திட்டேன். என் யூனிஃபார்ம் டிரெஸ் எல்லாம்” என்று சொல்லி மறுபடியும் அழத் தொடங்கினாள்.


“அதைவிடு, வேற வாங்கிக்கலாம். அழக்கூடாது. வா” என்று சொல்லி கிளம்பினார்கள்.


விஜயா வேறு யாரும் இல்லை. நம் ஹீரோவின் குடும்பத்தை சேர்ந்தவள் தான். பாண்டியராஜனின் மகள். நம் ஹீரோ அவினாஷின் அத்தை. அந்தக் காலத்திலேயே லவ் மேரேஜ். வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை. வீட்டைவிட்டு ஓடிவந்து வேணுகோபாலை திருமணம் செய்து கொண்டாள். அதுவும் அவளுடைய நிச்சயதார்த்த நாளன்று. ஆகையால் முழுமையாக அவளை தலை மூழ்கிவிட்டனர் பாண்டியராஜன் குடும்பத்தினர். திருமணம் முடிந்து சென்ற போது பேச்சுத் தகராறில் வேணுகோபாலையும் கன்னத்தில் அடித்து விட்டார் பாண்டியராஜன். அதிலிருந்து விஜயாவிற்கும் அந்தக் குடும்பத்திற்கும் உறவு அறுந்து விட்டது. 


அப்போது அவினாஷூக்கு 3 வயது. மற்றும் அவனுடைய அண்ணன் அர்ஜூனுக்கு 7 வயது. இருவரும் அவர்களுடைய அம்மா நிர்மலாவைக் கட்டிக்கொண்டு “அத்தை, அத்தை” என்று அழுதார்கள். சிவராமன் தன் அப்பாவை தடுத்து நிறுத்திவிட்டு.


வேணுகோபாலிடம் வந்து.


“மன்னிச்சிடுங்க, அப்பா ஏதோ கோபத்துல அடிச்சிட்டாரு. இங்கிருந்து போயிடுங்க” என்று கைக்கூப்பி சொன்னார் சிவராமன்.


ஆத்திரத்திடனும் கோபத்துடனும் விஜயாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தான் வேணுகோபால்.


அன்று இரவே தன் மனைவியிடம் 


“இதுக்கு மேல நமக்கும் அந்தக் குடும்பத்துக்கும் சம்பந்தம் கிடையாது. எனக்கு சத்தியம் செய்து கொடு” என்றான் வேணுகோபால்.


வேறுவழியின்றி, கண்கள் கலங்க.


“ சரிங்க” என்று சத்தியம் செய்தாள் விஜயா.


இதைப்பற்றி அவர்கள் இருவருமே ராஜகோபாலிடமோ அல்லது லக்ஷ்மியிடமோ சொல்லவில்லை. இது தெரியாமல் அவர்கள் இருவரும் விஜயாவின் குடும்பத்தை ஹர்ஷிதாவின் விழாவிற்கு அழைக்க நினைத்தனர்.


ஆஃபீஸூக்கு சென்றதும், ராஜகோபால் வேணுகோபாலிடம்.


“நம்ம யமுனாவோட புருஷனுக்கு கால் பண்ணி சொல்லிடு”


“ஹாங் சரிங்க அண்ணா”


ஃபோனை எடுத்து,


“ஹலோ மாமா, நான் வேணு பேசறேன்”


“ஹாங் சொல்லுங்க மச்சான்”


“நம்ம ஹர்ஷி பெரிய பொண்ணா ஆயிட்டா. சாயங்காலம் தண்ணி ஊத்தலாம் வந்திடுங்க”


“அப்படியா? ரொம்ப சந்தோஷம் மச்சான். பெரிய மச்சான் இருக்காறா?”


“ஹாங், இதோ தரேன்”


“ஏய், ஏன்டா?” என்று ஆக்ஷன் செய்து கொண்டே ஃபோனை வாங்கினார் ராஜகோபால்.


“இல்லண்ணா, அவர் தான் உங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்” என்று ஃபோனை மூடிக் கொண்டு மெதுவாக கூறினார் வேணுகோபால்.


“ஹலோ ராமு, எப்படிப்பா இருக்க?”

என்றார் ராஜகோபால்.


“நல்லா இருக்கேன் மச்சான். நீங்க எப்படி இருக்கீங்க?”


“நல்லா இருக்கேன். தம்பி சொன்னான் இல்ல வந்திடு பா. யமுனாவையும் வேலனையும் கூட்டிக்கிட்டு வந்திடு”


“அதெல்லாம் சரி மச்சான், வீட்டிற்கு பெரியவர் நீங்க. நீங்க தான கால் பண்ணி சொல்லிருக்கனும். நியாயமா பார்த்தா நேரா வந்து கூப்பிட்டு இருக்கனும்”


“என்னதான் இருந்தாலும் அவன் தான பொண்ணோட அப்பா. அதுவும் இல்லாம இன்னைக்கு நைட்டு தண்ணி மட்டும் தான் ஊத்தப்போறோம். ஃபங்ஷனுக்கு நேரா வந்துதான் சொல்லுவோம்”


“ஹாங். சரி, சரி. இன்னைக்கு எனக்கு ஆஃபீஸ்ல மீட்டிங் இருக்கு. நான் யமுனாவையும் வேலனையும் அனுப்பி வைக்கிறேன்”


“அப்படியா? சரி ராமு”


“வரலைன்னு சொன்ன உடனே, சரின்னு சொல்லிட்டீங்க. கம்பல் பண்ணி வரச் சொல்ல மாட்டீங்களா?”


ஃபோனை காதில் இருந்து எடுத்து ரீசிவரை மூடிவிட்டு,


“இவெனெல்லாம், என்ன பண்றது. என் தங்கச்சிக்கு வந்த சாபம். நம்மளையும் ஆட்டிப் படைக்குது”


“விடுங்க அண்ணா டென்ஷன் ஆவாதீங்க”


“என்ன பதிலே இல்லை மச்சான்?”


“இல்ல ராமு, ஏதோ முக்கியமான வேலை இருக்கவே தான் வரமுடியலைன்னு சொல்ற. அதை விட்டுவிட்டு வான்னு சொன்னா தப்பா ஆயிடும் இல்ல? அதான்”


“ஹாங், சரி, சரி. கரெக்டா புரிஞ்சிக்கிட்டீங்க. வைக்கிறேன். பை”


“பை ராமு” என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு வேணுவிடம், 


“இனிமே இந்த ராமு கால் பண்ணி என் கிட்ட கொடுக்கச் சொன்னா தயவு செஞ்சு என் கிட்ட ஃபோனை கொடுக்காத. உயிரை வாங்கறான். இவ்வளோ நேரம் எவ்ளோ சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? ஃபோன் பேசி கடுப்பேத்திட்டான்”


“அவரை பத்தி தான் நமக்கு தெரியுமே அண்ணா. ஃபோனை கொடுக்கலன்னாலும் அதுக்கும் எதாவது குறை சொல்லுவாரு. அக்கா தான் பாவம் இவரு கூட எப்படி தான் குடும்பம் நடத்துறாளோ?”


“ஆமாம், நம்ம யமுனாவுக்கு கோவில் கட்டனும் இந்த மாதிரி ஆளு கூட இத்தனை வருஷமா குடும்பம் நடத்துறதுக்கு”


“வரேன்னு சொன்னாறா?”


“இல்ல, வேலை இருக்காம். அவன் வரலைன்னாலே நம்ம நிம்மதியா இருக்கலாம்”


“ஆனா நம்ப முடியாது அண்ணா. வரலைன்னு சொல்லிட்டு வந்து நிப்பாரு. நம்ம எதுக்கும் ஜாக்கிரதையா பேசணும்”


“ஆமாம், ஆமாம். அவன் ஒரு லூசு. வந்தாலும் வந்து நிப்பான்”

“அப்புறம் வேணு”


“சொல்லுங்க அண்ணா”


“நம்ம விஜயாவோட வீட்டுக்கு போய் சொல்லிட்டு நம்ம வீட்டுக்கு போகலாம்”


“என்ன அண்ணா சொல்றீங்க? விஜயாவுக்கு யாரும் கிடையாது. நாம மட்டும் தான். அந்த வீட்டிற்கும் விஜயாவுக்கும் சம்பந்தம் இல்லை”


“வேணு, நான் சொல்றதை கொஞ்சம் கேளு”


“இல்லண்ணா, முடியாது. இந்த ஒரு விஷயத்தில என்னை கட்டாயப் படுத்தாதீங்க”


“வேணு” என்று சற்று குரல் உசத்தி கூறி. நான் போய் சொல்லப் போறேன். நீயும் கூட வர. அவ்வளவுதான்”


“விஜயா சொன்னாளா கூப்பிடச் சொல்லி?”


“இல்ல லக்ஷ்மி சொன்னா”


“ஓ, அண்ணிக்கிட்ட சொல்லி உங்க மூலமா கேட்டாளா?”


“ஏய், அவளுக்கு எதுவுமே தெரியாது. நான் லக்ஷ்மிக்கிட்ட விஜயாவுக்கு விஷயம் தெரிய வேண்டாம் என்று சொன்னேன்”


“இப்போ எதுக்கு? முறிஞ்சு போன உறவை ஒட்ட வைக்க நினைக்கறீங்க?”


“நம்ம ஹர்ஷிக்கு எல்லா உறவுகளும் வேணும். எல்லாரோட ஆசிர்வாதமும் வேணும் ன்னு நினைக்கிறேன்”


அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் வேணுகோபால்.


“என்னடா, பதிலே பேச மாட்டேங்குற?”


“சரி, உங்களுக்காக நான் கூட வரேன். ஆனா ஒரு வார்த்தை பேச மாட்டேன்”


“சரிடா, நானே சொல்லிக்கிறேன்”


இருவரும் காரில் ஏறி கிளம்பினார்கள்.



இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.