இன்னும் ஒருமுறை சொல்

ஆதன் ஆரா, அருப்புக்கோட்டை. | 16 Jan 2026 | Share

கூட்ட நெரிசலால்

என்னை நெருங்க முடியாமல்

உன் உள்மனதால் என்னோடு

ஏதோ பேசிவிட்டுச் சென்றாய்

மக்கள்திரளின் பேரிரைச்சலில்

நீ பேசியது

என் நிழல் வரைதான் எட்டியது

என் மனம்வரை எட்டவில்லை

இன்னும் ஒருமுறை சொல் என்றார்

பிரபஞ்சவெளியில்

ஏதோ ஒரு புள்ளியிலிருந்து

இறங்கி வந்த

இரக்கமே வடிவான இறைவன்

பசுமரத்திலிருந்து உதிர்ந்த பூவிதழ்

காற்றோடு என்ன பேசுமோ

அதைத்தான் பேசிவிட்டு சென்றேன்

என்றான் மனிதன்

சற்று விளக்கமாக கூறுக என்று

அன்புக் கட்டளையிட்டார் இறைவன்

அதற்கு இணங்கி

விளக்கிக் கொண்டிருந்தான் மனிதன்

தன் ஒளிவட்டத்தை அணைத்துவிட்டு

உறங்கிவிட்டார் இறைவன்

அதற்குப் பிறகுதான்

உணர்ந்தான் மனிதன்

அது வெறும் கனவு

கல் உருவாக இருந்தபோது

நெருங்க முடியாதுபோன கடவுள்

தன் கண்ணுக்குள் கனவுருவாய்

நெருங்கி வந்த பெருமகிழ்ச்சியோடு

அன்றைய விடியலைக்

கண்டான் மனிதன்

அதற்கு முன்பு

அப்படி ஒரு விடியலை

அவன் கண்டதே இல்லை

ஆனால் ஏனோ

அது போன்ற ஒரு விடியலை

தன் வாழ்வில் மீண்டும் காண

அவன் விரும்பவும் இல்லை

    No comments yet.