
தித்திக்கும் தேன்பாவை
பாகம் 3
கௌசல்யாவின் கையைப் பிடித்து,
” என்ன கௌசி, எதுக்கு என் மேல கோபம்? “
என்று ஒன்னும் தெரியாதது போல கேட்டார் ரங்கநாதன்.
” நீங்களும் உங்க பொண்ணும் சேர்ந்துட்டு தான் என்னை வெறுப்பேத்துனீங்க இல்ல? “
” சரி கௌசி, நம்ம சம்பாதிக்கிறது யாருக்காக?
குழந்தைகளுக்காக தானே? “
” அதுக்காக அவங்க எது கேட்டாலும் என்ன ஏதுன்னு கேட்காம வாங்கி கொடுத்திடுவீங்களா? “
” குழந்தைங்க சந்தோஷம் தானம்மா நமக்கு முக்கியம் “
“என்னமோ போங்க, நான் என்ன சொன்னாலும் நீங்க நினைக்கிறது தான் நடத்துவீங்க ”
இவ்வாறு இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது,
ரங்க நாதனின் ஃபோன் அடித்தது.
ஃபோனை எடுத்தார் ரங்கநாதன்.
என்ன? எப்போ? என்று அதிர்ச்சியாக பேசினார் ரங்கநாதன்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த கௌசல்யாவிற்கு என்ன விஷயம் என்று தெரியாமல் மனது பதைபதைத்தது.
ஃபோனில் தன் கணவர் யாரிடம் பேசுகிறார்? யாருக்கு என்ன நேர்ந்தது? என்று எதுவும் புரியாமல் சிறிது நேரத்திற்கு தவித்தார் கௌசல்யா.
ஃபோனை வைத்த அடுத்த நொடி
“யாருக்கு என்ன ஆச்சுங்க?” என்று பதட்டமாக கேட்டார் கௌசல்யா.
” நம்ம சிவஞானம் இல்ல, அவரோட அம்மா இறந்துட்டாங்களாம் “
” அச்சச்சோ, அண்ணாவும் அண்ணியும் கிளம்பிட்டாங்களா? “
” இப்பதான் கிளம்புறாங்க, அதான் நம்ம கிட்ட தகவல் சொல்லிட்டு போறாங்க “
” நாளைக்கு அப்ப அவங்க ரெண்டு பேராலும் நிச்சயதார்த்தத்துக்கு வர முடியாது இல்ல?”
” ஆமாம் கௌசி, வேற யாராவதுன்னா போய் பார்த்திட்டு வந்துருவாங்க. இது அவரோட அம்மாவாச்சே?, என்னதான் அந்த அம்மா அவங்க பொண்ணோட ஊரிலேயே இருந்தாலும், இவர் போய் தான் எல்லா வேலையும் எடுத்து போட்டு செய்யணும். நார்மலா இருந்தா நம்மளும் போய் இருப்போம். இப்ப நம்மளால போக முடியாது. அங்க போக முடியாததுக்கு இங்கயாவது போய் அவர்கிட்ட பேசிட்டு வரலாமா? “
“சரிங்க” என்று சொல்லி இருவரும் எதிர் புறம் இருக்கும் சிவஞானம் வீட்டிற்கு சென்றனர்.
சிவஞானம், சிவகாமி இருவரும் ஊருக்கு தேவையான துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது உள்ளே சென்றனர் கௌசல்யா மற்றும் ரங்கநாதன்.
“வாப்பா ரங்கா, வா மா கௌசல்யா ” என்றார் சிவஞானம் சற்றே வருத்தமாக.
” கவலைப்படாதப்பா, வயசானவங்க இன்னும் எவ்வளவு நாளைக்கு பெட் ரிடன்னா இருப்பாங்க”
” நானும் அதை நினைச்சுகிட்டு நான் பா கொஞ்சம் மனச தேத்திக்கிறேன். இருந்தாலும் அம்மாவாச்சே. இத்தனை நாள் இல்லனாலும் இப்பதான் அவங்க சொன்னது, சின்ன வயசுல பேசுனதெல்லாம் ஞாபகம் வருது ” என்றவர் சொல்லும் போதே கண்கள் கலங்கியது.
சிவகாமிக்கும் கண்கள் கலங்கியது.
கௌசல்யா சிவகாமியின் கையை பிடித்து.
” அண்ணி நீங்க தானே அண்ணனுக்கு ஆறுதல் சொல்லனும் நீங்களே அழுத்திங்கன்னா
எப்படி? “
” இல்ல கௌசல்யா, அவங்க மத்த மாமியார் மாதிரி கிடையாது. கல்யாணம் ஆகி பத்து வருஷம் நாங்க அவங்க கூட தான் ஊரில் இருந்தோம். அப்புறம் தான் இவருக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்கவே இங்கே வந்திட்டோம். அங்கே இருக்கும் போது ஒருமுறை கூட என்னை திட்டினது கிடையாது என் மாமியார். நான் ஏதாவது சமையல்ல தப்பு பண்ணிட்டா கூட. புதுசா சமைக்கும் போது இந்த மாதிரி எல்லாம் தப்பு வருவது சகஜம் தான்மா. அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லை. அப்போது தான் இன்னும் நல்லா சமையல் பண்ண கத்துக்க முடியும்ன்னு சொல்லுவாங்க.
போன மாசம் வரைக்கும் கூட அவங்களோட துணியை அவங்களே தோய்த்து கிட்டு, நல்லா நடமாடிக்கிட்டு தான் இருந்தாங்கன்னு என் நாத்தனார் சொன்னாங்க. எப்போ பாத்ரூம்ல வழுக்கி விழுந்தாங்களோ. அப்பத்தில் இருந்து படுக்கையா ஆயிட்டாங்க. நாங்க இரண்டு முறை போய் பார்த்துட்டு தான் வந்தோம். இங்க கூட்டிகிட்டு வருவதற்கு அவங்க கிட்ட கேட்டோம். அவங்க ட்ராவல் பண்ணக்கூடிய சூழல்ல இல்ல. அதுவும் இல்லாம அவங்களுக்கு அங்கயே செட் ஆயிடுச்சி. அதனால இங்கே வர
மறுத்துட்டாங்க ” என்று சொல்லி கண்கள் கலங்கினார் சிவகாமி.
“கவலைப்படாதீங்க அண்ணி,” என்று சொல்லும்போதே கௌசல்யாவிற்கு கண்கள் கலங்கியது.
” சரி நிச்சயதார்த்த வேலை எல்லாம் எப்படி போகுது? ” என்றார் சிவகாமி கௌசல்யாவை பார்த்து.
“போகுது அண்ணி. நீங்களும் அண்ணாவும் வர முடியாது என்ற ஒரே கவலை மட்டும் தான் இப்போதைக்கு எனக்கு “
” என்ன பண்றது கௌசி நாங்க எதிர் பார்க்கலையே இதை”
” சரிதான் அண்ணி, யார் கையில என்ன இருக்கு? “
” கௌசி, “
” சொல்லுங்க அண்ணி “
” ஷியாம் அப்புறம் ஷிவானி ரெண்டு பேரையும் நாங்க கூட்டிகிட்டு போகல. அவங்களை கொஞ்சம் பார்த்துக்கொள்கிறாயா?”
” என்ன அண்ணி இதெல்லாம் சொல்லனுமா?
நான் நந்தினிக்கு மெசேஜ் அனுப்பிறேன் காலேஜ்ல இருந்து வரும்போது அவங்களையும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லி. அங்கேயே இரண்டு பேரும் தங்கிக்கட்டும். “
” என்னமா காலேஜ் படிக்கிறாங்க, அவங்களை என்னமோ குழந்தை மாதிரி ட்ரீட் பண்ற? ” என்றார் சிவஞானம் தன் மனைவி சிவகாமியை பார்த்து.
“நம்ம வீடு தனியா இருக்கு இல்லீங்க, அதான் ஒரு பயம்”
” எனக்கும் அந்த பயம் இருக்கும் தான், போன மாசம் திருடு போனதிலிருந்து. ஆனா ரெண்டு பேராதான இருக்க போறாங்க. ஷியாம் பார்த்துப்பான் ஷிவானியை”
” பார்த்துப்பாங்க நான் இல்லன்னு சொல்லல. இருந்தாலும் கௌசல்யா வீட்டில் இருந்தா கொஞ்சம் சேஃப்பா இருப்பாங்கன்னு தோணிச்சு “
” இருக்கட்டும் ஞானம், எங்களுக்கும் நிச்சயதார்த்த வேலைக்கு கூட மாட ஹெல்ப் பண்ண மாதிரி இருக்கும்ல அப்படி நினைச்சுக்கயேன்” என்றார் ரங்கநாதன்.
” சரி சரி ரங்கா, உன் பையன் அர்ஜுனுக்கும் வரப்போற மருமக பேர் என்ன மறந்துட்டேன்? “
“ஊர்மிளா “
“அர்ஜூனுக்கும் ஊர்மிளாக்கும் வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லிடு பா”
” கண்டிப்பா ஞானம் நீ போய் சேர்ந்துட்டு ஃபோன் பண்ணு பா “
” சரி, அங்க சிக்னல் கிடைக்காது. வெளியே கடைக்கு மார்க்கெட்க்கு வரும்போது பண்றேன் பா” என்று சொல்லி அவர்கள் இருவரும் கிளம்பினார்கள்.
வீட்டிற்கு வந்த பிறகு ரங்கநாதன் ஊர்மிளாவின் அப்பா ராஜசேகருக்கு கால் செய்தார்.
“ஹலோ, வணக்கம் சம்பந்தி எப்படி இருக்கீங்க?”
” வணக்கம் சம்பந்தி, நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க? வீட்ல எப்படி இருக்காங்க? “
” எல்லாரும் நல்லா இருக்கோம் சம்மந்தி நிச்சயதார்த்த வேலை எல்லாம் எந்த அளவுல இருக்கு? “
” எங்க சம்பந்தி டைமே பத்த மாட்டேங்குது. இத்தனைக்கும் அந்த காலம் மாதிரி இல்ல எல்லாத்துக்குமே காண்ட்ராக்ட்ல விட்டாச்சு, அப்படியும் ஏதாவது ஒரு வேலை இருந்துகிட்டே தான் இருக்கு. இப்ப நான் கார்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ஊர்மிளாவும் அவங்க அம்மாவும் டெய்லர் கடைக்கு உள்ள போயிருக்காங்க. டெக்ரேசன் மாடல் எல்லாம் வந்து இருக்குன்னு பார்ட்டி ஹாலில் இருந்து கால் பண்ணி சொன்னாங்க. என் பையன் கிட்ட சொல்லி பார்ட்டி ஹாலுக்கு போய் செக் பண்ண சொல்லி இருக்கேன். “
” அப்படியா அர்ஜுனும் அங்க தான் போறேன்னு கால் பண்ணி சொன்னான், மே பி உங்க பையன்தான் வர சொல்லி இருப்பார் “
” என்ன சம்மந்தி நீங்க? சின்ன பையன், அவனை பேர் சொல்லியே கூப்பிடலாம் இல்ல எதுக்கு வாங்க போங்க அவரு இவரு எல்லாம் சொல்றீங்க? “
” டாக்டருக்கு படிக்கிறாரு விஷ்வா. அப்புறம் எப்படி நான் பேர் சொல்லி கூப்பிடுவது? “
” டாக்டருக்கு படிச்சாலும் நம்ம பசங்க தான சம்மந்தி. “
” சரி சம்பந்தி உங்க விருப்பத்துக்காக நான் பேர் சொல்லியே கூப்பிடுறேன், போதுமா? “
” ரொம்ப சந்தோஷம் சம்பந்தி. அப்புறம் விருந்தாளிகள் எல்லாரும் வந்துட்டாங்களா?
உங்க வீட்ல எந்த அளவுல இருக்கு நிச்சயதார்த்த வேலை? “
” வரிசை வைக்கிறதுக்கு நிறைய தட்டு வாங்கணும், கடைக்கு போகணும், மார்க்கெட் போகணும்னு கௌசல்யா சொல்லிக்கிட்டே தான் இருந்தா. இன்னும் கிளம்பல இதுக்கு மேல தான் ரெடி ஆகி போகணும். சரி, அதுக்குள்ள உங்க கிட்ட ஒரு வார்த்தை பேசிடலாம்னு கால் பண்ணேன் “
” சரிங்க சம்பந்தி அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். இதை ஃபோன்ல சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க “
” என்ன சம்பந்தி சொல்லுங்க? “
” அர்ஜுனனுக்கும் ஊர்மிளாவுக்கும் லவ் மேரேஜ் என்று நான் என்னோட சொந்தக்காரங்க கிட்ட சொல்லல. என்னோட க்ளோஸ் ரிலேட்டிவ்ஸுக்கு தெரியும். ஊர்ல இருந்து வர்றவங்க யாருக்கும் தெரியாது. அதனால”
” ஏன் சம்மந்தி தயங்குறீங்க தைரியமா சொல்லுங்க? “
” இல்ல கேஸ்ட் பத்தி எதுவும் யாரும் பேச வேண்டாம் “
” எங்க வீட்ல யாரும் அதுக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்குறவங்க கிடையாது சம்மந்தி. அதெல்லாம் யாரும் கேட்க மாட்டாங்க. உங்களுக்காக நான் என்னோட சொந்தக்காரங்க கிட்ட சொல்லி வைக்கிறேன்”
தொடரும்….
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.