
பாகம் 2
ரிசப்ஷன் மேடையில் இருந்து கீழே இறங்கிய பிறகு தன் அப்பாவை வழிமறித்த முகுந்தன்,
” யாருப்பா இது, இந்த பொண்ணுக்கு என்னை எப்படி தெரியும்? “
” ஞாபகம் இல்லையா டா உனக்கு. நம்ம சேகர் அங்கிள் பொண்ணு. ” என்றார்.
” உங்க ஃபிரெண்டு ராஜசேகர் அங்கிளா? “
” ஆமாம் ஆமாம் அவரே தான். “
” அவரோட பையனுக்கு கல்யாணம் தானே என் கிட்ட சொல்லிட்டு வந்தீங்க? “
” அந்த லட்சணத்துல நீ காதுல வாங்கி இருக்க. சேகர் பொண்ணு கல்யாணத்துக்கு வாடான்னு தான் நான் உன்னை கூப்பிட்டேன். அவனுக்கு ஒரே ஒரு பொண்ணு தான். பையனெல்லாம் இல்லை. ஆமாம் நீதான் வரலைன்னு சொன்னியே? இப்போது எப்படி வந்த? ” என்றார் முகுந்தனின் அப்பா கோபாலகிருஷ்ணன்.
” அங்கிள் அஜய் அண்ணா இருக்காருல அவர் என் அண்ணனோட ஃப்ரெண்ட் ” என்றான் விக்னேஷ்.
” ஓ அப்படியா? சரி சரி “
” அப்பா, இந்த பொண்ணை நான் பார்த்ததே இல்லையே?”
” சின்ன வயசுல சேகர் சென்னையில் தான் டா இருந்தான். நீ அந்த பொண்ணு எல்லாம் ஒன்னா தான் விளையாடுவீங்க. அந்த பொண்ணு உன்ன விட பத்து மாசமோ ஒரு வருஷமோ பெரியவ. சின்ன வயசுல இருந்து உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லி கிட்டே இருப்பா. நாங்க எல்லாம் அவளை கிண்டல் செய்வோம். நீ அவனுக்கு அக்கா என்று சொல்லுவோம். இல்லை இல்லை நான் அக்கா இல்ல. முகுந்து தான் என்னோட ஹஸ்பண்ட் அப்படின்னு சொல்லுவா.”
” எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லப்பா “
” அப்போ அவளுக்கு ஒரு நாலரை வயசு இருக்கும், உனக்கு மூன்றை இருக்கும். அதான் உனக்கு ஞாபகமில்லை. உங்க அம்மா கிட்ட கேட்டா கரெக்டா தெரியும் எவ்வளவு வயசு வித்தியாசம் உங்க இரண்டு பேருக்கும்ன்னு ”
” அம்மா எங்கே? “
” நானும் அம்மாவும் இப்பதான் அவளுக்கு கிஃப்ட் கொடுத்துட்டு சாப்பிட போலாம்னு இருந்தோம். அதுக்குள்ள எனக்கு ஒரு ஃபோன் வந்துச்சு. நான் பேசிட்டு வரேன் நீ கீழ போன்னு சொன்னேன். அப்போது தான் நீ மேடையில ஏறியதைப் பார்த்துட்டு நானும் மேலே ஏறி வந்து தர்ஷினி கிட்ட உன்னை அறிமுகப்படுத்தினேன்”
“ஓ, ஓகே ஓகே”
” சரி வா சாப்பிட போகலாம்”
” இல்லப்பா நீங்க போய் சாப்பிடுங்க நான் அப்புறமா சாப்பிடுறேன் “
” ஏன்டா சாப்பிட்டு வந்தேனா நம்ம அப்படியே கிளம்பலாம் இல்ல வீட்டுக்கு? “
” நான் விக்கி கூட தானே வந்தேன் அதனால அவன் கூடவே திரும்பி வரேன். நீங்களும் அம்மாவும் வீட்டுக்கு போங்க”
” என்னடா டிரிங்க்ஸ் பார்ட்டி ஏதாவது இருக்கா? “
” அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் சீக்கிரமா வரேன் நீங்க கிளம்புங்க “
” எனக்கு தெரியும் டா, சரி சரி ரொம்ப நிறைய அடிக்காத. லிமிட்டா குடிச்சிட்டு சீக்கிரமா வீடு வந்து சேரு “
” நீங்க கிரேட் அங்கிள், எல்லாருக்கும் இப்படி ஒரு அப்பா அமைஞ்சுட்டா எவ்வளவு சூப்பரா இருக்கும் தெரியுமா? ” என்றான் விக்னேஷ்.
” பசங்களை எதை ஒன்னும் செய்யாத செய்யாதன்னு சொன்னா தான்டா அதை செய்ய தோணும். நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும் அவங்களே அனுபவிச்சு தெரிஞ்சுகிட்டா தான் வாழ்க்கையில் பக்குவம் வரும்”
” அங்கிள் நீங்க ஞானி ” என்றான் விக்னேஷ்.
” போதும் போதும் கலாய்ச்சது, போய் வேலையை பாருங்க ” என்ற சிரித்துக் கொண்டே அவன் தோளைத் தட்டினார் கோபாலகிருஷ்ணன்.
” சத்தியமா சொல்றேன் அங்கிள் ” என்றான் விக்னேஷ்.
“ஏய் போதும் வாடா” என்று சொல்லி தன் நண்பனை இழுத்துச் சென்றான் முகுந்தன் .
பிறகு ஏதோ ஞாபகம் வந்தவனாய்,
“அப்பா”
“என்னப்பா?”
” அப்போ சென்னையில இருந்தாங்கன்னு சொன்னீங்க இல்ல, இப்ப எங்க இருக்காங்க? “
” யாரு சேகரா? “
“ஆமாம் “
“இப்போ பெங்களூர்ல இருக்கான். ஆனா தர்ஷினி இங்க தான் இருப்பா. அஜய்க்கு சென்னைல ட்ரான்ஸ்பர் ஆயிடுச்சு அதனால அவளும் இங்க மாத்திக்கிட்டு வந்துட்டா. “
“ஓ லவ் மேரேஜா?,” என்றான் முகுந்தன்.
” ஆமாம் முதல்ல ரொம்ப யோசிச்சான் சேகர்.
ஏன்னா அஜய்க்கு அப்பா அம்மா கிடையாது.
அப்புறம் பையன பத்தி விசாரிச்சதுல நல்ல பையன்னு தெரிஞ்சுது. அதனாலதான் ஒத்துக்கிட்டான். பெங்களூர்ல அவனோட பிசினஸ பார்த்துக்க சொல்லி அஜய் கிட்ட கேட்ட போது. எக்ஸ்பீரியன்ஸ் இல்லாம பாத்துக்கறது கஷ்டம் அங்கிள் அப்படின்னு பாலிஷா சொல்லி மறுத்து விட்டான். இந்த காலத்தில் இப்படி ஒரு நல்ல பையன் கிடைக்கிறது கஷ்டம்னு நான் தான் பேசி சேகரை சம்மதிக்க வச்சேன் “
” ஏன் இந்த காலத்தில் அப்படி ஒரு பையன் கிடைக்க கஷ்டம்னு சொன்னீங்க? “
” ஏய் உன்னையே எடுத்துக்கோடா. பிசினஸ் உன் பெயரில் எழுதி வைக்கிறேன் நீ வந்துருப்பா பெங்களூருக்கு வீட்டோட மாப்பிள்ளையான்னு சொன்னா. நீ போய் இருக்க மாட்டியா? “
அமைதியாக இருந்தான் முகுந்தன்.
” உன்ன பத்தி எனக்கு தெரியும் டா. நீ எல்லா பக்கமும் யோசிச்சிட்டு அப்புறம் சரின்னு சொல்லிருப்ப”
” அப்பா, அப்போ என்னை விட அவன் ரொம்ப நல்லவன் என்று சொல்றீங்களா? “
என்று சற்று கோபமாகவே கேட்டான் முகுந்தன்.
” கோச்சிக்காத டா, நீ என் பையன் அதனால நான் வேணும்னா உன்னை நல்லவன் என்று சொல்லலாம். உன்னையும் அஜயையும் கம்பேர் பண்ணி வேற யாராவது ஒருத்தர் கிட்ட கேட்டா கண்டிப்பா அவங்க அஜய் தான் சொல்லுவாங்க” என்றார் கோபாலகிருஷ்ணன் சிரித்துக் கொண்டே.
“போங்க அப்பா” என்று சொல்லிவிட்டு சற்றே கடுப்புடன் அங்கிருந்து தன் நண்பனுடன் மண்டபத்தை விட்டு வெளியே வந்தான்.
” மச்சி கிளம்பலாம் வாடா “
” எங்கடா? “
” நாம எதாவது பப்புக்கு போய் சரக்கு அடிக்கலாம் “
” ஏன்டா? அஜய் அண்ணா தான் ட்ரீட்டு தரேன்னு சொல்லி இருக்காரு. அந்த ஹோட்டலுக்கு போகலாம் வா.”
” எனக்கு பிடிக்கல வேண்டாம். நீ தானடா போகணும்னு சொன்ன? “
“அப்போ சொன்னேன் இப்பதான் வேணாம்னு சொல்றேன் இல்ல வா போகலாம் “
அவன் டல்லாக இருப்பதை பார்த்து புரிந்து கொண்ட விக்னேஷ் சரி வா போகலாம் என்று சொல்லி அவர்கள் எப்போதாவது செல்லும் ஒரு பப்புக்கு சென்றனர்.
இரண்டு பெக்கு அடித்து விட்டு,
“சரி டா நா கிளம்புறேன்” என்றான் முகுந்தன்.
” என்னாச்சுடா? ஏன் இன்னும் டல்லாவே இருக்க? “
” என்னன்னு தெரியல டா, என்னவோ போல இருக்கு”
” கல்யாண மண்டபத்தில் நடந்தது வச்சு சொல்றியா? “
” இருக்கலாம், அதனால இல்லாமலும் இருக்கலாம். “
” மச்சி மனசுல இருக்குறத சொல்லிடு அப்பதான் மைண்டு கிளியரா இருக்கும்”
” நான் இந்த ரிசப்ஷனுக்கு வந்தது தப்புன்னு தோணுது டா “
” ஏன்டா? “
” அந்த கல்யாண பொண்ணு பார்த்தில் இருந்து, அவ இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிறத ஏத்துக்க முடியல”
” என்னடா சொல்ற லூசா நீ? “
” மிஞ்சி போனா ரெண்டு நிமிஷம் பார்த்து இருப்பியா அவளை. அதுக்குள்ள உனக்கு லவ் வந்துடுச்சா? “
” அதாண்டா எனக்கும் புரியல. நம்ம விளையாட்டுக்கு பேசிகிட்டு இருந்ததெல்லாம் ஓகே. நான் அவளை கல்யாணம் பண்ணிக்க போறேன் அப்படின்னு சொன்னதெல்லாம் கூட எனக்கு பெருசா தெரியல. ஆனா அவ என்னை கட்டிப் பிடிச்சதுல இருந்து என்னால வேற எதையும் யோசிக்கவே முடியல. எனக்கான பொண்ணு அவ தான்னு தோணுது”
” பிராக்டிகலா யோசிச்சு பாருடா மச்சி. அவளுக்கு ஏதோ வலுக்கட்டாயமாக கல்யாணம் பண்றாங்கன்னு கூட நீ சொல்றதெல்லாம் ஒரு நியாயம் இருக்கு. அந்த கல்யாணத்தை நிறுத்திட்டு உன் கூட கல்யாணம் பண்ணி வைக்கலாம். அது கூட அந்த பொண்ணுக்கு விருப்பம் இருந்தா மட்டும் தான். ஆனா இப்போ நடக்க போறது லவ் மேரேஜ். ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் லவ் பண்றாங்க. எப்படி நீ அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைப்ப? தப்பா நினைச்சுக்காத மச்சி நான் இப்படி சொல்றேன்னு. நீ பண்றதுதப்பு டா. அந்தப் பொண்ணு அஜய் அண்ணாவோட பொண்டாட்டி டா “
” இப்போ இல்ல இல்ல, நான் இப்பதான் சொல்றேன். எனக்கும் புரியுது தப்புன்னு. நாளைக்கு காலையில அவ கழுத்துல தாலி ஏறுன அப்பறமா நான் இப்படி சொல்லி இருந்தா தான் தப்பு. என்னை பொறுத்தவரை இப்போ தப்பு இல்ல”
‘ முதலில் இப்படி பேசுகிறான்?’ என்று நினைத்து வருத்தம் கொண்டான் விக்னேஷ்.
“மச்சி ” என்று பேச வந்த விக்னேஷை.
” நான் போய் வெளியே ஜீப்ல வெயிட் பண்றேன். நீ சீக்கிரமா செட்டில் பண்ணிட்டு வா” என்று சொல்லி தன் பர்சை அவன் இடம் கொடுத்து விட்டு வெளியே வந்து ஜிப்பில் அமர்ந்து ஃபோனில் எடுத்த ஃபோட்டோவை பார்த்துக் கொண்டிருந்தான் முகுந்தன்.
முதல்முறையாக தர்ஷினியை பார்த்தபோது அவனுடைய ஃபோனில் ஜூம் செய்து அவளை ஃபோட்டோ எடுத்தான். அந்த போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு
‘கடவுளே எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோன்ற வைக்கிறாய்?’ என்று சொல்லிவிட்டு அந்த ஃபோட்டோவை டெலிட் செய்தான். அவனையும் அறியாமல் அவன் கண்கள் கலங்கியது.
விக்னேஷ் வருவதைப் பார்த்துவிட்டு தன் கண்களை துடைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்து கொண்டான் முகுந்தன்.
” மச்சி நீ அடுத்த வாரம் யூஎஸ் போற
தானே? “
” ஆமாண்டா”
” விக்ரம் அண்ணா கிட்ட சொல்லி இருக்கேன் அவன் உனக்கு ஹெல்ப் பண்ணுவான். ஆக்சுவலி அவன் இருக்கிறது நீ போக போற இடத்த வேற தூரம் தானாம்.
ஆனாலும் அங்க யாரோ தெரிஞ்சவங்க இருக்காங்க அவர்கிட்ட சொல்லி உனக்கு தங்கறதுக்கு எல்லாம் ஏற்பாடு பண்றேன்னு சொன்னான் விக்ரம் அண்ணா”
” ஓகே டா தேங்க்ஸ் “
” என்னடா புதுசா தேங்க்ஸ் எல்லாம் சொல்ற? “
” தெரியாம சொல்லிட்டேன்டா ஏதோ ஞாபகத்துல “
” எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும். உன் கூட தான் ஊர சுத்திக்கிட்டு இருந்தேன். இப்ப என்ன பண்றதோ தெரியல? “
பதில் பேசாமல் அமைதியாக இருந்தான் முகுந்தன்.
“முகுந்த், என்னடா ஆச்சு பதிலே பேச மாட்டேங்குற?”
” ஒன்னும் இல்லடா, தலை வலிக்குது. எங்க வீட்ல என்னை டிராப் பண்ணிடு. நான் என் பைக்கை நாளைக்கு எடுத்துக்கிறேன்”
” ஓகேடா ” என்றான் விக்னேஷ்.
அவன் வருத்தமாக இருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட விக்னேஷ் அதற்கு பிறகு எதுவும் பேசவில்லை. முகுந்தனை வீட்டில் இறக்கி விட்டு விட்டு விக்னேஷ் அவனுடைய வீட்டிற்கு சென்றான்.
முகுந்தன் வீட்டிற்குள்ளே நுழையும் போது,
” முகுந்தா, நீயும் கல்யாண ரிசப்ஷனுக்கு வந்தியாமே? சாப்பிட வரல?” என்றார் அம்மா
பிரேமலதா.
” இல்லம்மா பசிக்கல “
” கண்ணா எதுவும் சாப்பிடாம தூங்க போகாத பா. இரு நான் தோசையாவது ஊத்தி தரேன் “
” இல்லம்மா பசிக்கல. ப்ளீஸ் நான் போய் தூங்குறேன். தலை ரொம்ப வலிக்குது”
” தலை வலிக்குதுனா? அப்ப கண்டிப்பா ஒரு ரெண்டு தோசையாவது சாப்பிடுப்பா வெறும் வயித்துல இருந்தா தலைவலி இன்னும் அதிகமாயிடும்”
” அம்மா ப்ளீஸ்மா சொன்னா புரிஞ்சுக்கோங்க நான் தான் வேண்டாம்னு சொல்றேன்ல? ” என்று கெஞ்சலும் கோபமுமாக சொன்னான் முகுந்தன்.
” பிரேமா, விடுமா. அவன் என்ன குழந்தையா? பசிச்சா சாப்பிட போறான். நீ டேபிள் மேல எடுத்து வச்சிடு. வேணும்னா அவனே வந்து சாப்பிட்டுக்குவான். நீ நாளைக்கு காலையில கல்யாணத்துக்கு என்ன புடவை கட்டணும்னு பேசிகிட்டு இருந்த இல்ல? நீ போய் அதை எடுத்து வை ” என்றார் கோபாலகிருஷ்ணன்.
‘ தான் அஜயை முகுந்தனுடன் கம்பேர் செய்ததால் தான் மூடு ஆஃபில் இருக்கிறான் தன் மகன்’ என்று நினைத்துக் கொண்டார் கோபாலகிருஷ்ணன்.
“ஆமாங்க, நீங்க சொல்லுங்க நான் எந்த புடவை கட்டட்டும்? பச்சை புடவையா? சிகப்பு புடவையா?”
” ஏதோ ஒன்னு கட்டுமா “
” நீங்க சொல்லுங்க ” தன் அம்மா தன் அப்பாவிடம் பேசுவதை கேட்டுக் கொண்டே படி ஏறி தன் ரூமுக்கு சென்றான் முகுந்தன்.
‘ கல்யாணத்துக்கு வேற போக போறாங்களா?’ என்று நினைத்துக் கொண்டான்.
வெகு நேரமாக சிறு வயதில் தர்ஷினியுடன் அவன் விளையாடிவது, பேசியது ஏதாவது ஞாபகத்திற்கு வருமா என்று யோசித்துப் பார்த்தான். ஆனால் ஒன்று கூட வரவில்லை.
தலைவலி அதிகமாகியது தான் மிச்சம்.
பிறகு அப்படியே படுத்து தூங்கி விட்டான்.
காலை எழுந்து பிரஷ் செய்துவிட்டு கீழே இறங்கியவன் அப்போதுதான் தன் அப்பா அம்மா ரெடி ஆகி ஹாலுக்கு வந்ததை பார்த்தான்.
” எழுந்துட்டியாப்பா? தலைவலி
போயிடுச்சா? ” என்றார் பிரேமலதா.
” சரியாயிடுச்சு அம்மா “
” அப்படின்னா குளிச்சுட்டு வரியா கல்யாணத்துக்கு போகலாம்?, நேத்தே சேகர் அண்ணாவும், வள்ளி அண்ணியும் உன்னை பார்க்க முடியவில்லையே என்று கேட்டாங்க”
” இல்லம்மா, நான் வரல நீங்க போங்க. அடுத்த வாரம் யு.எஸ். போக போறேன் இல்ல அதுக்கு சில வேலைகள் எல்லாம் இருக்கு. “
” என்னங்க நீங்க சொல்லுங்களேன் அவனுக்கு. ஒரு மணி நேரம் தானே ஆகும். அங்க போனா எல்லாரையும் பார்த்து பேசலாம் இல்ல? “
” பையன கம்பெல் பண்ணி கூட்டிட்டு போற வயசு எல்லாம் தாண்டியாச்சு. அவன் விருப்பத்துக்கு விடுமா. ஏன் இன்னும் அவனை குழந்தையாகவே ட்ரீட் பண்ற நேத்து தானே சொன்னேன்? “
” ஆமாம் என்னைக்கு நான் சொன்னதை நீங்க கேட்டு இருக்கீங்க? உங்ககிட்ட போய் கேட்டேன் பாருங்க. ” என்று கோபாலகிருஷ்ணன் இடம் பொரிந்து தள்ளிவிட்டு. தன் மகனைப் பார்த்து.
” சரிடா கண்ணா நேத்தே நீ சாப்பிடல. இப்போ மார்னிங் ப்ரேக்பாஸ்ட்டையும் ஸ்கிப் பண்ணாத. நீயாவது நான் சொல்றத கேளு” என்றார் பிரேமலதா.
இதற்கு மேல் மறுப்பு சொன்னால் கோபப்படுவார் தன் அம்மா என்று தெரிந்து கொண்ட முகுந்தன்,
” ஓகே மா நான் குளிச்சிட்டு சாப்பிடுறேன். நீங்க கிளம்புங்க” என்றான்.
‘ அடக்கடவுளே சம்பந்தமே இல்லாம நான் மாட்டிக்கினு முழிக்கிறனே! நானா இவ சொல் பேச்சை கேக்கல? இவ பையன் தானே கேட்கல. இப்ப பழி மொத்தம் என் மேல வந்துருச்சு. நீயாவது என் சொல் பேச்சைக் கேளுன்னு புள்ளைக் கிட்ட சொல்றா’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு சிரித்தார் கோபாலகிருஷ்ணன்.
” எதுக்கு இப்ப இந்த நக்கலான சிரிப்பு? ” என்று பிரேமலதா சொல்ல.
” ஒன்னும் இல்ல பிரேமா, சீக்கிரமா போலாம் வா முகூர்த்தம் முடிஞ்சற போது. அப்புறம் சேகரும் வள்ளியும் நம்மகிட்ட கோச்சுப்பாங்க” என்றார் தன் மனைவியை பார்த்தபடி.
பிறகு இருவரும் காரில் ஏறி திருமண மண்டபத்திற்கு சென்றனர்.
அவர்கள் கிளம்பிய பிறகு சிறிது நேரம் சோஃபாவில் அமர்ந்து கொண்டு இருந்தான்.
அங்கே இருந்த டீபாய் மேலே அஜய் தர்ஷினி கல்யாண பத்திரிக்கை இருந்தது.
அதை கையில் எடுத்துப் பார்த்தான். இருவரது புகைப்படமும் இருந்தது. பிரித்து பத்திரிக்கையை படித்தான். ஒன்பது பத்தரை முகூர்த்தம் என்று இருந்தது. உடனே டைம் பார்த்தான். மணி எட்டு அம்பது.
இன்னும் தர்ஷினி மிஸ்ஸஸ் அஜய் யாக ஆகவில்லை என்று நினைத்தபடி அவள் முகத்தை கடைசியாக ஒரு முறை காதலுடன் பார்த்தான்.
பிறகு அந்த பத்திரிக்கையை கிழித்து குப்பையில் போட்டுவிட்டு தன் ரூமுக்கு சென்றான் முகுந்தன். பிறகு வேகமாக கீழே இறங்கி வந்து குப்பையில் இருந்த அந்த பத்திரிக்கையை எடுத்து ஒரு கவரில் போட்டு எடுத்துக்கொண்டு போய் வெளியே தெரு முனையில் இருந்த பெரிய குப்பை தொட்டியில் போட்டான். வீட்டிற்கு வந்த பிறகு தன் அப்பா அம்மா அவனுடைய அந்த செயலை பார்த்தால் தன்னை பற்றி தவறாக நினைப்பார்கள் என்று நினைத்து அவ்வாறு செய்தான்.
No comments yet.