53….
நிஷா சொன்ன வார்த்தைகளை தாங்க முடியாமல் இடி விழுந்த மரம் போல அப்படியே நின்றாள் தேனுகா. மனம் உடைந்து போன இப்ராஹிம் தாத்தா நிஷாவை முறைத்தார்.
“நிஷா என்ன பேசுற ? வயசு ஆச்சே அதுக்கு ஏத்த அறிவோட பேச மாட்டியா நீ ? சின்ன பொண்ணு, அவ மனச நோகடிக்கிற மாதிரி அனாதை அது இதுன்னு சொல்லுறியே? உனக்கு மனசாட்சினு ஒண்ணு இருக்கா இல்லையா ?” அவர் அலறிய அலறலில் ஆயிஷா, நஸ்ரி,ன் கதீஜா என்று அந்த சமயத்தில் வீட்டில் இருந்த அனைவரும் ஹாலில் கூடி விட்டனர்.
“போதுங்க அத்தா, நீங்க எப்பயுமே இந்த தேனுகாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்க அது எனக்கு நல்லாவே தெரியும். ஆனா அதுக்காக என் மனசுல இருக்குற ரணங்கள் எல்லாத்தையும் மனசுக்குள்ளயே போட்டு புதைச்சு வச்சுக்க என்னால முடியாது . நான் இப்ப என்ன தப்பா பேசிட்டேன்னு என்னைய கத்துறீங்க ? அழகா அமைதியா இருந்த வீடு இப்படி அலங்கோலமா ஆனதுக்கு காரணம் யாரு?”
“வேற யாருமில்ல மாமி , நான் தான்… நானே தான்… அதுக்கு இப்ப என்ன செய்ய சொல்றீங்க?” ஜூனைத் கத்த, கதீஜா பதறினாள். மீண்டும் தேனுகாவை வைத்துத் தான் ஏதோ சண்டை என சடுதியில் புரிந்து கொண்டவர் , அவளை பரிதாபமாக பார்த்தார். இந்த சின்ன வயசுல ஏன் இந்த பொண்ணுக்கு இவ்ளோ கஷ்டம்?
“வாயை மூடு ஜூனைத், உன்னை நான் ரொம்ப செல்லமா வளர்த்துட்டேன் அதனால சும்மா சும்மா கை நீட்டக் கூடாதேன்னு பாக்குறேன். இல்லனா நீ செஞ்ச காரியத்துக்கு நடக்குறதே வேற, இவள எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்த? உன்னை நிக்காஹ் பண்ணிக்கிட்டு வந்துட்டா உன் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடங்கி இருக்கணும் அதை செய்யுறாளானா இல்ல , அப்படி ஒட்டாம ஒரு வாழ்க்கை வாழ அவசியம் இல்லனு சொல்றா சரி தான் அப்ப என்ன செய்யணும் ? இங்க இருந்து போயிரணும் சட்டப்படி இவனைப் பிரிய என்ன வழியோ அதை பாக்கணும் அதையும் செய்ய மாட்டேங்குறா, இவளால தான் என் மூத்த மகன் இங்க இருந்து தனியா போனான் என் பேரனையும் பேத்தியையும் என்னால பாக்க முடியல”
“ஆக மொத்தத்துல உனக்கு உன் மகன் செஞ்ச காரியத்தால கொஞ்சம் கூட அசிங்கமோ அவமானமோ இல்ல அவன் வெளிய போனது தான் வருத்தமா இருக்கு அப்படி தான? இங்க பாரு நிஷா , அவங்க தேனுகானால வெளிய போகல அவங்க ஷைத்தான் சொல் கேட்டு ஆடுனாங்க அவங்க செஞ்ச மோசமான செயல்களால அல்லாஹ் அவங்கள நேசிக்க மாட்டான், வெறுப்பான் .. அப்படிப்பட்டவங்க இங்க நம்ம எல்லார் கூடவும் இருக்குறது எனக்கு நல்லதா படலை அதனால தான் நான் அவங்கள வெளிய தொரத்தினேன். அதுக்கு காரணம் ஜூனைத் தேனுகா இல்லை புரிஞ்சுக்க “
“நல்லா புரியுது அத்தா….இந்த வீட்ல உங்க பேச்சை கேட்டுக்கிட்டு இருக்குறவங்க தான் இருக்கணும், அப்படி இல்லாதவங்கள நீங்க வெளிய அனுப்பிருவீங்க அப்டி தான? உங்களுக்கு ஒருத்தர புடிச்சா நாங்க அவங்கள தலைல தூக்கி வச்சு கொண்டாடணும், உங்களுக்கு ஒருத்தர பிடிக்கலன்னா அவங்கள நாங்க எல்லாருமே வெறுக்கணும் அப்படி இருந்தாத் தான் எங்களை மதிப்பீங்க இல்ல? உங்க இஷ்டத்துக்கு ஆடுற கைப்பாவைகளா நாங்க ? சொல்லுங்க”
“நிஷா ;அத்தாவை ஏன்டி எதிர்த்து எதிர்த்து பேசுற? அவரு என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்டு தான நமக்கு பழக்கம்?”
“இல்ல இல்ல ஆயிஷாக்கா, இனிமேல் என்னால அந்த மாதிரிலாம் இருக்க முடியாது . எனக்குனு சுயமா விருப்பு வெறுப்பு இருக்கும்ல ? இத்தன நாளா நான் அத பத்தியெல்லாம் யோசிச்சது இல்ல , ஆனா இனிமே யோசிக்கப் போறேன். என் மனசு சொல்றபடி தான் கேக்க போறேன். உன்னை நான் அன்னிக்கே சொல்லிட்டேன் என் விஷயத்துல தலையிடாதன்னு நீ ஏன் கேக்க மாட்டேங்குற ? அவ்வளவு கடுமையா சொல்லியும் உனக்கு புரியலயா?”
“அன்னிக்கு நீ என்ன சொன்ன?
உன் மகளை நீ கண்டிக்கிறப்ப நான் அதுல தலையிடக் கூடாதுன்னு சொன்ன நான் இப்ப அதுல தலையிடல நீ அத்தாவை எதிர்த்து பேசுற அது தான் ஏன்னு கேக்குறேன்” ஆயிஷாவும் பாயிண்டாக பேச, வீடு போர்க்களம் போல் ஆனது.
“நான் உங்கள எதிர்த்து பேசுறேன் உங்கள மதிக்க மாட்டேங்குறேன்னு யாரு என்ன வேணாலும் சொல்லட்டும் அதைப் பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல….. இப்ப நான் சொல்றேன், என் மகன் இல்லாத இந்த வீட்டுல தேனுகா இருக்கக் கூடாது. இவ இங்க இருந்தான்னா ரஷிதாவும் கெட்டு போயிருவா . இவளால தான், இவ இந்த வீட்டுக்குள்ள வந்ததால தான், அதை நீங்க யாருமே எதிர்க்காததால தான், இன்னக்கி என் மக வேற ஒரு மதத்த சேந்த பையன் கூட பழகுறா. இவ நம்ம வீட்டுல இருக்குற சின்ன புள்ளைகளுக்கு எல்லாம் தவறான முன் உதாரணம் . இவ இங்க இருந்து போகலன்னா நான், என் வீட்டுக்காரர், என் மகன் , மருமக, மக, பேத்தி, எல்லாருமே இங்க இருந்து கிளம்பிருவோம். உங்களுக்கு யாரு முக்கியம், யாரு வேணும்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க” நிஷா ஒரே போடாக போட , சந்தோஷம் தாளாமல் நஸ்ரின் மெல்ல அவ்விடத்தை விட்டு அகன்றாள். மெல்ல நடந்து மொட்டை மாடிக்கு செல்லும் படிகளில் ஏறிக்கொண்டே தன் ஃபோனை எடுத்து நசீமாவுக்கு அழைத்தாள்.
“இருடி , இப்ப தான் ஜமாத் ஆளுங்க எல்லாரும் இங்க இருந்து கிளம்பப் போறாங்க… வந்து நம்ம ராதாவை ஒரு வழி பண்ணாம விட மாட்டாங்க”
“அதுக்கு அவசியமே இல்ல ஆப்பா, அத சொல்லத் தான் ஃபோன் பண்ணேன் . ஜமாத் ஆளுகள விட்டு பேச சொல்லாமலேயே அந்த தேனுகா இங்க இருந்து கிளம்பிருவா போல தெரியிது. நீ அவங்கள இங்க அனுப்ப வேணாம்”
“என்ன சொல்ற நஸ்ரினு?” நசீமா ஆச்சரியமாய் கேட்டாள்.
“நம்ம மாமி, ராதா ராதி ஆயிஷா மாமி ஜூனைத் தேனுகான்னு அத்தனை பேரையும் நிக்க வச்சு வெளு வெளுனு வெளுத்துட்டு வாங்கிட்டு இருக்கு, அவ இங்க இருந்தான்னா என்னை சேந்தவங்க யாரும் இங்க இருக்க மாட்டோம்னு சொல்லிருச்சு. இந்த சந்தோஷமான விஷயத்தை உடனே உன் கிட்ட சொல்லி நம்ம முயற்சியை நிறுத்த சொல்லலாம்னு தேன் ஃபோனை தூக்கிட்டு மொட்டை மாடிக்கு ஓடி வந்தேன் ஆப்பா”
“நம்ம மாமியா? இது எப்படி சாத்தியம்? என்னால நம்பவே முடியலடி”
“எல்லாம் ரஷிதானால தான்.. இன்னக்கி காலேஜூக்கு போனப்ப அவளோட சர்ட்டிஃபிகேட் ஃபைலை எங்கயோ தொலைச்சுட்டா, கூட படிக்குற பையன் விக்ரம்னு ஒருத்தன், அவன் ரஷியோட ஃபிரண்டாம் அதை பாத்து வீட்ல கொண்டு வந்து குடுக்க நினைச்சு வந்தான், அதுக்கு தான்” என்று நடந்தது அனைத்தையும் விவரித்தாள்..
“அடி சக்கை …. மாமி சரியான பாயிண்ட்ட புடிச்சுருச்சு இத்தன நாள் பிள்ளைப்பூச்சியா இருந்துச்சு, இப்ப திடீர்னு கொடுக்கு முளைச்சு குளவியா மாறி கொட்ட ஆரம்பிச்சுருச்சே?”….
“விடு, குளவியாகி தேனுகாவ தான கொட்டுது ? அது நமக்கு நல்லது தான?”
“இல்லையா பின்ன? மாமி அந்த தேனுகாவ சுட்டிக்காட்டி அவ நம்ம வீட்டு பிள்ளைகளுக்கெல்லாம் தவறான ஒரு முன் உதாரணம்னு சொல்லுச்சு பாரு, அதுதான்டி டக்கரான பேச்சு. சரி அப்ப நான் போய் எங்க வீட்டுக்காரர் கிட்ட இவங்கள அங்க கிளம்ப வேணாம்னு சொல்லி நிறுத்துறேன் , நீ கீழ ஓடிப் போய் அங்க என்ன நடக்குதுனு பாரு”
“ம்ம்ம் வைக்கட்டா?”
“வை வை”…நஸ்ரின் ஃபோனை கட் செய்து விட்டு, மீண்டும் கீழே சென்றாள்.
“மாமி, தேனுகா என் மனைவி . நான் தான் அவளை விரும்பி இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேனே தவிர அவளா இங்க வரல , அதனால நானா அனுப்பற வரைக்கும் அவ இங்க இருந்து போக மாட்டா, நான் போகவிட மாட்டேன்”
” சரி அப்போ நீயே அவளை இங்க இருந்து அனுப்பிரு , என்ன பாக்குற? நம்ம குடும்பம் உடையாம இருக்கணும்னா நீ இவளை வெளிய அனுப்பித்தான் ஆகணும், உனக்கு யார் வேணும்? நம்ம குடும்பமா? இல்ல இவளா ? முடிவு இப்ப உன் கையில தான்” நிஷா தீர்மானமாய் சொல்லி முடிக்க,
“ஏங்க ஜூனைத் , விடுங்க , நான் போறேன் . நிறைய நடந்து போச்சு, இனியும் இங்க இருந்தா அது நல்லா இருக்காது” சொல்லிக்கொண்டே ஜூனைத் கட்டிய தாலியை கழற்றப் போன தேனுகாவை நெருங்கி, அவள் கன்னத்தில் பளார் என அறைந்தார் தேனுவிற்கு ப்ரியமான ஆயிஷா அம்மா…
– தொடரும்…..
No comments yet.