47…
“இங்கயா? இங்க எப்படி? இது அரசாங்க ஆஸ்பத்திரி தெரியும்ல? நீ நினைக்கிற மாரி இங்க வச்சு அவள போடுறது அவ்ளோ ஈசி இல்ல”
” இங்க பாரு டா, அவனோட பொணத்த இன்னும் கொஞ்ச நேரத்துல போஸ்ட்மார்ட்டம் செய்யுறதுக்காக மார்ச்சுவரிக்கு எடுத்துட்டு போயிருவாங்களாம் . நாளக்கி காலயில டாக்டர் வந்த உடனே தான் வேலை தொடங்கும் . அது வரைக்கும் தேனுகா உள்ள தான் இருப்பா, அங்க இங்கனு எங்கயும் அலைய மாட்டா. அண்ணன் கிட்ட கேப்போம் அவரு சரின்னு சொன்னா போட்ரலாம்”
“இருந்தாலும்ம்ம்ம்”…..
” நீ பயப்படுற மாரி ஒண்ணும் நடக்காது, என் கிட்ட பக்காவான ப்ளான் ஒண்ணு இருக்கு. என் போன்ல பேலன்ஸ் இல்ல, நீயே அவருக்கு ஃபோனை போடு”
“சரி இரு பேசிட்டு வர்றேன்” ஒருவன் அங்கிருந்து அகல….
” அப்புறம் என்னாச்சு ஜூனைத்?” ஆர்வம் தாங்காமல் கேட்டான் ரவி. இருவரும் ஆஃபீஸ் கேன்ட்டீனில் அமர்ந்திருந்தனர் . தேனுகா மூர்த்தி அண்ணனுக்கு தன் கல்யாணக் கதையை சொல்ல ஆரம்பித்திருந்த அதே நேரத்தில், இங்கு ஜூனைத்தும் ரவியிடம் அதைப்பற்றி சொல்ல ஆரம்பித்திருந்தான்.
“அந்த நேரத்துல எனக்கு ஒரே ஒரு விஷயம் தான்டா தோணுச்சு, இந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்க இருந்த பையன் சாகுறதுக்கு காரணமா இருந்து இவ வாழ்க்கையை அழிச்சுட்டோம் ஆனா எப்பாடு பட்டாவது இவ உசுரை காப்பாத்தணும்”
“ரொம்ப சரியான யோசனைடா, மேல சொல்லு”
அன்று….
காரின் கதவை ஓசைப்படாமல் திறந்து ,அந்த தடியர்களை அவர்களுக்கு தெரியாமல் இருட்டில் மறைந்து மறைந்து பின் தொடர்ந்தான் ஜூனைத். ஒரு ஜீப்பில் ஏறி அமர்ந்திருந்த அவர்கள், ஃபோனை ஸ்பீக்கரில் போட்டுக்கொண்டு யாரோ அட்டெண்ட் செய்வதற்காக காத்திருந்தனர்.
“ஹலோ”…..
“அண்ணே”
“சொல்லுடா……எங்க இருக்கீங்க அங்க என்ன நிலவரம்?”
“ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கோம்ணே, அந்த தேனுகா மட்டும் இங்க தனியா தேன் இருக்கா. கூட ஒரே ஒரு கொடுக்கு மட்டும் இருக்கு அதை ஈசியா சமாளிச்சிரலாம். அதான் இங்கனயே வச்சு அவள போடலாம்னு நினைக்கிறேன், இந்த லூசு பயந்து வேணாங்குறயான்”
“சந்தர்ப்பம் கிடைச்சா முடிக்க வேண்டியது தான? இந்த மாதிரி ஒரு சூழ்நிலை இனி எப்ப வாய்க்குமோ? முடிஞ்ச அளவு இன்னக்கி ராத்திரியே அவளயும் போட முயற்சி செய்யுங்க, கருப்பு கோட்டு மாட்டுன தைரியத்துல என்னயவே ஜெயிலுக்கு அனுப்புனால்ல? அவ செத்து ஒழியணும்” ஓ ! தேனுகா லாயரா ? ஆச்சரியமானான் ஜூனைத்.
“சரிணே”….
“அப்புறம் இன்னொண்ணு”
“சொல்லுங்கணே”
“இப்பலாம் எல்லா இடத்துலயும் கேமரா இருக்கு, அதுவும் ஹாஸ்பிட்டல்ல கேக்கவே வேணாம் .. மூஞ்சி முகரைய மறைச்சுக்கிட்டு போங்க. நான் ஒரு வண்டி நிறைய நம்ம ஆட்களை அனுப்பி வைக்கிறேன், எதுக்கும் சேஃப்டிக்கு இருக்கட்டும்”
“என்னணே , அதெல்லாம் நீங்க சொல்லணுமா ? அந்த ப்ரித்வியை போட்ட மாரியே இவளையும் போட்ரலாம் சரிணே நீங்க ஆள் அனுப்புங்க”
“சரிடா முடிச்சுட்டு கூப்பிடு”. ஃபோன் கட் ஆகி விட , “என்னாடா இப்படி ஸ்பீக்கர்ல போட்டு பேசுற? யாருக்காவது கேட்டுட்டா என்னா ஆகுறது?”
“ஏய்ய்ய் குமாரு , இப்ப உனக்கு என்னதான்டா பிரச்சனை ?எதுக்குனாலும் பயந்துக்கிட்டே இருக்க, இப்ப மணி ஒண்ணாகப் போகுது இந்நேரத்துக்கு யாரு இங்க இருக்கப் போறாங்க? அப்படி யாராவது கேட்டுட்டு வந்து என்ன ஏதுனு கேட்டாங்கனு வை, பொருள வச்சு முகத்துல மார்க் போட்டு அனுப்பிரலாம். அண்ணன் சொன்னத கேட்டயில்ல? ஆள் அனுப்புறாராம் வா உள்ள போயி அவ நடமாட்டத்த கண்காணிக்கலாம்”
அய்யோ…..பாவம் தேனுகா, எப்பாடு பட்டாவது இதைப் பத்தி அவங்க கிட்ட சொல்லி அவங்கள காப்பாத்தணும். இதை மட்டும் நம்ம செய்யாம விட்டோம்னா அல்லாஹ் நம்மள எப்பவுமே மன்னிக்க மாட்டாரு, அங்கிருந்து வேகமாக நகர்ந்து வந்த ஜூனைத் , மீண்டும் ஐ.சி.யூ இருந்த திசைப்பக்கம் ஓடினான் அங்கு அவன் நுழைந்த போது ஏதோ தகராறு போய்க் கொண்டிருந்தது.
“என்னங்க , தப்பையும் பண்ணிட்டு திமிராவும் பேசிக்கிட்டு இருக்கீங்க? இது உங்க வேலை தான? உங்க வேலையை சரியா செய்யாததால இப்ப பாதிக்கப்பட்டு நிக்கிறது யாரு?” தேனுகா தான் கேட்டு கொண்டிருந்தாள். “சிஸ்டர் நீங்க தைரியமா இருங்க , நல்லவேளை அவங்க ஊசிய மாத்தி போடறதுக்கு முன்னால நீங்க கவனிச்சுட்டீங்க அதான் பாப்பாவுக்கு ஒண்ணும் ஆகலைல? ஆனா இவங்க நிச்சயமா தண்டிக்கப்பட வேண்டியவங்க தான். சட்ட ரீதியா இவங்க மேல நடவடிக்கை எதுவும் எடுக்க விரும்பினா சொல்லுங்க நான் அதுக்கு உதவி செய்யுறேன்” சே… என்ன பெண் இவள் ? உயிர் போகும் வேதனையில் உழன்று கொண்டிருக்கும் போது கூட அடுத்தவர்கள் படும் துன்பத்துக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய நினைக்கிறாளே? ராதா அடிக்கடி சொல்லுவாரே, இறைவன் எல்லாரும் பாக்குற மாரி பூமியில நடமாட மாட்டான் , அடுத்தவங்க துன்பப் படுறதை பாத்து கண்ணீர் சிந்துறவங்க கிட்டயும், அவங்க துன்பத்தைத் துடைக்க தன்னாலான உதவியை செய்யுறவங்க கிட்டயும் நாம இறைவனைப் பாக்கலாம்னு. அப்ப இவ எந்த மாதிரியான பொண்ணு? அங்கு அலட்சியமாய் நின்றிருந்த நர்ஸோடு கோபமாய் வாதிட்டபடி இருந்த அவள் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஜூனைத்துக்கு ஒரு கணம் உடல் சிலிர்த்தது . எந்த பெண்ணை பார்க்கும் போதும் தோன்றாத ஒரு வகை சிலிர்ப்பு…. அவளை பார்க்கும் போது உடல் முழுவதும் பரவ, ஒரு கணம் அதிர்ந்தான் ஜூனைத். அய்யோ… விடிஞ்சா எனக்கும் ரஷிதாவுக்கும் மங்கனா நடக்கப் போகுது இந்த சமயத்துல போய் எப்படி எனக்கு இந்த மாதிரியான எண்ணங்கள் வருது? இது தப்பு ஜூனைத் , அந்த பொண்ணை எச்சரிக்கை செய்யத்தான் நீ இப்ப உள்ள வந்த , அந்த வேலையை மட்டும் பாத்துட்டு கிளம்பு . அவனை அவனே கட்டுப்படுத்திக் கொண்டு மேலும் அவளை நெருங்கினான் . அந்த நர்ஸ் ஏதோ பேச வேண்டும் என்று தேனுகாவை அழைத்துக் கொண்டு தனியே சென்று விட, சட் என திரும்பிப் பார்த்த பவித்ரா, அவனைக் கண்டதும் முறைத்தாள்.
“என்ன சார் ? உங்களத் தான் நான் அப்பவே கிளம்ப சொன்னேனே, இப்ப என்ன வேணும் உங்களுக்கு? சொல்லுங்க”
“மேம்….உங்க ஃபிரண்டு உயிருக்கு ஒரு ஆபத்து , அத சொல்லி அவங்கள பாதுகாப்பா இருக்க சொல்லத் தான் நான் வந்தேன் . ப்ரித்விய கொலை செஞ்ச அந்த ரவுடி கூட்டம் தேனுகாவையும் கொலை செய்ய இங்க வந்திருக்காங்க , அந்த கேங்குக்கும் தேனுகாவுக்கும் என்ன விரோதம்னு எனக்கு தெரியாது ஆனா தேனுகா மேல தப்பு இல்லனு மட்டும் தெரியுது. அவங்க கிட்ட தேனுகா மாட்டிக்கக் கூடாது”
“ஆஹா….. ரொம்ப அக்கறை தான், நீங்க மட்டும் ப்ரித்விய காட்டி குடுக்காம இருந்திருந்தா அவ எதுக்கு ஆபத்துல மாட்டிக்கப் போறா?” பவித்ராவின் கிண்டல் ஜூனைத்துக்கு எரிச்சலைத் தான் வர வழைத்தது.
“ஏங்க, இப்ப அதயெல்லாம் பேசுற நேரமா ? எனக்கு தேனுகா முகத்தைப் பார்க்க குற்ற உணர்வா இருக்கு, என்னால அவங்கள எதிர்கொள்ள முடியல .. அதனால நீங்க தான் இந்த விஷயத்தை அவங்க கிட்ட பேசி, கொஞ்சம் அவங்கள ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்க”
“எல்லாம் நான் சொல்லிக்கிறேன்”
“சந்தோஷம் , நான் கிளம்பறேன்” ஜூனைத் அந்த ப்ளாக்கை விட்டு வெளியேறிய அதே நேரம் , அந்த தடியர்கள் இருவரும் உள்ளே வந்தனர். என்ன இவங்க ரெண்டு பேரும் உள்ள போறாங்க என்று நினைத்துக்கொண்டே அங்கேயே நின்றான். நேராய் சென்ற அவர்கள் , வராண்டாவில் தனியாய் நின்று கொண்டிருந்த பவித்ராவின் முன்னால் போய் நின்றனர்.
“ஏம்மா…. இங்க தேனுகா மேடம்”
“உள்ளதான் இருக்கா நீங்க யாரு?”
“நாங்க அவங்களோட கிளையண்ட்… இங்க எங்க தாத்தாவ அட்மிட் பண்ண வந்தோம் , தூரத்துல இருந்து மேடம பாத்தோமா அதான் என்ன ஏதுனு கேட்டுட்டு போலாம்னு வந்தோம்… மேடமுக்கு என்ன உடம்புக்கு?” அவர்கள் கொஞ்சம் கூட சந்தேகம் வராத அளவுக்கு பிசிறில்லாமல் பேசி முடிக்க, பவித்ராவுக்கு அவர்கள் மேல் எந்த சந்தேகமும் வர வில்லை.
“அது…. தேனுக்கு ஒண்ணுமில்ல அவளுக்கு நெருக்கமான ஒருத்தர் இறந்து போயிட்டாங்க , அதான்”…
“யாரு? மேடம்கு நெருக்கமானவர்னா அது ப்ரித்வி சார் மட்டும் தானே? அத விட்டா வேற யாரு இருக்கப் போறா?”
“என்ன சொல்றீங்க? ப்ரித்விய உங்களுக்கு தெரியுமா?” அவள் ஆச்சரியமாய் கேட்க, இந்த லூசு நம்மள நம்ப ஆரம்பிச்சிருச்சு எனும் விதமாக அந்த தடியர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “என்ன மேம் இப்படி கேட்டுட்டீங்க ? தேனுகா மேடம் கோவைல இருந்தப்ப அவங்க பக்கத்து வீட்டுல தான் நாங்க குடி இருந்தோம் ,அதனால அவங்களப் பத்தி எல்லாமே எங்களுக்கு தெரியும்”
“உங்க கெஸ் ஒர்க் சரி தான், ப்ரித்வி தான் இறந்து கிடக்குறாரு . அவ உள்ள தான் போயிருக்கா , நீங்க போய் பாருங்க , ஆறுதல் சொல்லுங்க” பவித்ரா சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே தன் பேண்ட் பாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த ஜாமரை ஆன் செய்தான் அவர்களில் ஒருவன். உடன் மின்னல் வேகத்தில் அருகில் திறந்திருந்த அறைக்குள் பவித்ராவை தள்ளி, அவள் வாயில் ப்ளாஸ்திரி ஒட்டி, கையை கயிறால் கட்டி , அறையையும் வெளியே பூட்டி விட்டு, சாவியை சட்டைப் பையில் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.
– தொடரும்….
No comments yet.