44…..
” ஓகே சார் ,உங்க உதவிக்கு நன்றி. இந்த உதவியை நான் என்னைக்குமே மறக்க மாட்டேன்”
“என்ன தேனுமா இது? நான் என்ன வேத்து மனுஷனா? சும்மா இரு”
” சரிங்க சார் , இனி நன்றி சொல்ல மாட்டேன். நாங்க போயிட்டு வர்றோம், ஜூனைத், கிளம்பலாமா?”
“கிளம்பலாம்”…ஜூனைத் கோவிந்தன் சாரின் குடும்பத்தினரிடம் விடைபெற்றுக் கொண்டான். வாசலில் நிறுத்தியிருந்த காரை நோக்கி வேகமாக விரைந்தான்.
” தேனு…..உன் வீட்டுக்காரர் ரொம்ப நல்ல மாதிரியா தெரியுறாரு , இவர டிவோர்ஸ் பண்ணுற ப்ளானை கொஞ்ச நாள் ஒத்திப்போட முடியுமானு பாரு . எனக்கென்னமோ உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல கூடிய சீக்கிரமே சூப்பர் அண்டர்ஸ்டேண்டிங் வந்துரும்னு தோணுது” தாரணி தேனுகாவின் காதுக்குள் கிசுகிசுக்க, புன்னகைத்து விட்டு அவளிடம் விடைபெற்று காரில் ஏறிக் கொண்டாள் தேனுகா…
“போலாமா?”
“போலாம்” ஒன்றும் பேசாமல் காரை கிளப்பினான் ஜூனைத் . அதற்கென்றே காத்துக் கொண்டிருந்த மாடசாமி, சற்று இடைவெளி விட்டு அந்த ஹோண்டா சிட்டியை பைக்கில் பின்தொடர ஆரம்பித்தான்.
எப்போது பார்த்தாலும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பவனின் இந்த மௌனம் தேனுகாவை வெகுவாய் தாக்கியது. ஆனால் அதைப்பற்றி அவனிடம் பேச ஏதோ ஒன்று தடுத்தது. தெருமுனையைத் தாண்டியவுடன் காரை ஓரம் கட்டினான் ஜூனைத்.
“என்னாச்சு?”
” கீழ இறங்கி பின்னாடி உக்காருங்க”
“எ…. எதுக்கு?”
“உங்க பக்கத்துல உக்காந்து டிரைவ் பண்ண எனக்கு அன்கம்ஃபர்ட்டபிளா இருக்கு , அதுக்கு தான் சொல்றேன்” முகத்தில் அடித்தாற்போன்ற அவனது பேச்சில் தேனுகாவின் கண்கள் கலங்கி விட , ஒன்றும் பேசாமல் கதவைத் திறந்து இறங்கி பின்பக்க சீட்டில் உட்கார்ந்தாள்.
” இனி உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது , வண்டிய ஸ்டார்ட் பண்ணுங்க”
“நான் சொன்ன உடனே பின்னாடி போய் உக்காந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ். இனி நான் நிம்மதியா வண்டி ஓட்டுவேன் லாயர் மேடம்”.. காரை இயக்கி செலுத்த ஆரம்பித்தான் ஜூனைத். சாலையில் அதிகமாய் ட்ராஃபிக் இருந்ததால் ஊர்ந்து தான் செல்ல முடிகிறது…..பாட்டை ஆன் செய்து விட்டு சாலையில் கவனமானான்.
இவனுக்கு ரொம்ப தான் திமிர். நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் ஓவரா தான் போறான் என்று ஒரு மனது சொல்ல, அவன் என்ன செஞ்சா உனக்கென்ன சீக்கிரம் நல்ல ஹாஸ்டலா பாத்து இவன விட்டு தூரமா போகுறதுக்கான வழியப் பாரு என்று சொன்னது இன்னொரு மனது….
“தேனுகா”….
“சொல்லுங்க”
“நாளக்கி நீங்க ஃப்ரீயா?”
“இல்ல ரொம்ப பிசி”….
“பிசியா? ஓகே ஓகே”
“ஏன் கேட்டீங்க?”
“புரியல”
” இல்ல ஃப்ரீயானு ஏன் கேட்டீங்கனு கேட்டேன்”
” எதுக்கோ கேட்டுட்டுப் போறேன் உங்களுக்கு என்ன மேடம்? நீங்க தான் ஃப்ரீயா இல்லயே , விடுங்க” அவனது பதில் தேனுகாவின் எரிச்சலை மேலும் அதிகப்படுத்த, பொறுமையிழந்து போய் கத்தி விட்டாள்.
“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை ஜூனைத்? எதுக்கு தேவயில்லாம வீம்பு பண்ணி என்னய சாகடிக்குறீங்க?”
” மைண்ட் யுவர் வேர்ட்ஸ் தேனுகா”
“எஸ் ஐ அம்…. நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில சொல்லுங்க, நான் உங்கள வேணாம் வேணாம்னு நீங்க என் கழுத்துல தாலி கட்டுன அன்னையில இருந்து தான சொல்லிக்கிட்டு இருக்கேன்? அப்பலாம் சும்மா இருந்துட்டு இப்ப எதுக்கு வீம்பு பண்றீங்க ? எனக்கு புரியல”
“ஹலோ …….நீங்க என்னை வேணாம்னு சொன்னதுக்காக நான் இப்ப வீம்பு பண்ணல, என்னைய கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம அவன மாதிரி தான் நீயும்னு ஜட்ஜ் பண்ணினீங்க, அதான் எனக்கு பிடிக்கல”
ஒரு குறிப்பிட்ட அளவு இடைவெளி விட்டு காரை தொடர்ந்து வந்து கொண்டேயிருந்த மாடசாமிக்குள் ஒரே ஒரு சிந்தனை தான் . இதோ நாம எதிர்பாத்துக்கிட்டு இருந்த சிக்னல் வரப் போகுது. அதைக் கடந்தால் ரயில்வே ஸ்டேஷன் வந்துரும், அந்தப்பக்கமா இருக்குற சந்தில இந்த ராத்திரி எட்டே முக்கால் மணிக்கு ஒரு ஈ காக்கா கூட இருக்காது. பகல்ல தனியா போகவே யாரும் யோசிப்பாய்ங்க , ஆனா இது அவங்க வீட்டுக்கு போறதுக்கு ரொம்ப பக்கம் அப்படின்றதால இந்த ஜூனைத் எப்பப் பாத்தாலும் இந்த வழியில தான் போறான் இன்னைக்கும் அதே வழியில போகப் போறான் என் கையால வெட்டு வாங்கி சாகப் போறான்…
” சரி…. நான் ஒரு கேள்வி கேக்குறேன் பதில் சொல்றீங்களா?” அமைதியாகக் கேட்டாள் தேனுகா.
“என்ன கேள்வி?”…..
“பதில் சொல்றீங்களா இல்லையா?” பல்லைக் கடித்தாள் தேனுகா…
“சொல்றேன், கேளுங்க”
“எனக்கு நீங்க தாலி கட்டி கொஞ்ச நாள் கூட ஆகல , நீங்களும் நானும் பரஸ்பரம் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்குள்ள போகவே இல்ல. நான் எப்படி , என் குணம் எப்படி, உங்க குடும்பத்துக்கு நான் செட் ஆவேனா எதுவுமே உங்களுக்கு தெரியாது. எல்லாத்துக்கும் மேலா எப்பப் பாத்தாலும் நான் உங்கள வேணாம் வேணாம்னு சொல்லிக்கிட்டு இருக்கேன் , இதுல நீங்க என்னை எப்படி காதலிக்க முடியும்?”….
……………………
” என்ன மௌனமா இருக்கீங்க? ஐ வான்ட் ஆன்ஸர்.. ரொம்ப சரியா ஒரு கேள்வி கேட்டிருக்கேன் இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்”
“லாயரா இருக்குற உங்களுக்கு கேள்வி கேக்கவா தெரியாது?” சிரித்துக் கொண்டே கேட்டான் ஜூனைத்.
“பேச்ச மாத்தாதீங்க”
“இல்ல நான் மாத்தல ,ஆனா உங்க கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது. ரைட், இன்னும் தெளிவா சொல்லணும்னா பதில் சொல்ல எனக்கு இஷ்டம் இல்ல”
“இஷ்டம் இல்லயா? ஏன் இஷ்டமில்ல?” ஆக்ரோஷமாய் கேட்டாள் தேனுகா.
” ஆமா. நான் உனக்கு சில விஷயங்கள புரிய வக்கணும் எனக்கு கொஞ்சம் டைம் குடு டைம் குடுனு நான் உங்ககிட்ட எத்தனை முறை கெஞ்சிருப்பேன் லாயர் மேடம்? அந்த டைமை நீங்க எனக்கு குடுக்கவே இல்லயே? கடைசியில நானா தான மொட்ட மாடியில உங்கள லாக் பண்ணி சொன்னேன்? அதுவும் முழுசா சொல்லல , அன்னைக்கே நான் சொல்ல வந்ததை சொல்லிருந்தா இப்ப நீங்க கேக்குற எந்த கேள்விக்குமே அர்த்தம் இல்லாம போயிருக்கும்”
“அதனால? பழி வாங்குறீங்களோ?”
” எக்சாக்ட்லி….. ஸோ நீங்க கேக்குற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது, கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீங்க ஃப்ரீயானு கேட்டேனே அதுக்கு வேணா ரீசன் சொல்லுறேன். உங்கள கூட்டிட்டு போய் ஹாஸ்டல் பாக்கலாம்னு இருக்கேன் அதுக்கு தான் கேட்டேன்”
“ஹாஸ்டலா?”…..
“ஆமா, இன்னும் சிக்ஸ் டேஸ்ல நீங்க தான் எங்க வீட்டுல இருந்து கிளம்பப் போறீங்கள்ல ? அதுக்கு ஹாஸ்டல் பாக்க வேணாமா?…. நான் நேத்து நெட்ல சில ஹாஸ்டல்ஸ் பாத்தேன் , அதான் நேரடியா போய் பாக்கலாமேன்னு கேட்டேன்”
“அந்த கவலை உங்களுக்கு வேணாம் சார் , எனக்கு என்னோட ஆபீஸ் இருக்கு நான் அங்க போய் தங்கிக்குவேன். எனக்காக யாரும் அலைஞ்சு திரிய வேணாம். உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி” அலட்சியமாய் சொன்னாள் தேனுகா.
” ஓகே நல்லது , எனக்கு பெட்ரோல் செலவு மிச்சம் தான்”….. அதே நேரம் அவனது காருக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த பைக் சட்டென ஸ்கிட் ஆகி , பின்னால் உட்கார்ந்திருந்த பெண் பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்தார். அய்யய்யோ …..பதறிய ஜூனைத் வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு இறங்க, பின்னாலேயே இறங்கி ஓடினாள் தேனுகா. ஆம்புலன்சை அழைத்தால் நேரமாகும் என்பதால் என் காருலயே ஹாஸ்பிட்டல் போயிரலாம் என்று சொல்லி அடிபட்ட பெண்ணையும் அவள் கணவனையும் காரில் ஏற்றினான், வேகமாக விரட்டினான்.. அடுத்த மூன்று நிமிடங்களில் வரும் அந்த இருட்டான சந்தில் பைக்கை வைத்து காரை குறுக்கில் சென்று மறித்து, ஜூனைத்தை வெட்டலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த மாடசாமி ஏமாற்றம் அடைந்தான் . இப்ப ஃபாலோ பண்ணி போனாலும் ஹாஸ்பிட்டல விட்டு எப்ப வெளிய வருவான் எந்த ரூட்டுல வருவான்னு ஒண்ணும் தெரியாது, பேட்ரோலிங் போலீஸ் கிட்ட மாட்டுனா வேற வம்பே வேணாம் .. அப்புறமா இவன பாத்துக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வந்த வழியே திரும்பினான்.
**************….
ஜமாலின் மொபைல் ஃபோன் அடிக்க , நசீமா எடுத்து யார் என பார்த்தாள் முஸ்தஃபா தான்.
” அஸ்லாமு அலைக்கும் மாமா”
“வ அலைக்கும் அஸ்லாம்…என்ன மா , என்ன செய்றீங்க எல்லாரும்? குழந்தைங்க எப்டி இருக்காங்க?”
“எல்லாரும் நல்லா இருக்கோம், இப்ப தான் சாப்பிட்டு முடிச்சோம் மாமா.. நீங்க சாப்பிட்டாச்சா?”
“சாப்பிட்டோம், ஜமால் எங்க? பக்கத்துல இருந்தான்னா போன குடு அவன் கிட்ட”
“தர்றேன் மாமா” கை கழுவிவிட்டு வந்த ஜமாலிடம் போனை குடுத்தாள் நசீமா… “அத்தா , சொல்லுங்க”
“நாளக்கி ஃபேக்ட்ரி பக்கத்துல இருக்குற காபி ஷாப்ல ஒரு பத்து மணி வாக்குல வெயிட் பண்ணு.. நானும் ஷாரிக்கும் அங்க வர்றோம், தேனுகாவைப் பத்தி உன் கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்”
“சரிங்கத்தா, நான் வந்துருறேன்”
“நீ மட்டும் இல்ல , கூட நசீமாவையும் கூட்டிட்டு வா. ஏன்னா நம்ம எல்லாரயும் விட அவ தான் தேனுகாவ நம் வீட்ட விட்டு அனுப்புறதுல அதிக முனைப்போட இருக்கா , சரியா?”
“ஓகேத்தா, நாங்க ரெண்டு பேரும் வர்றோம்”..போனை கட் செய்துவிட்டு நசீமாவிட விஷயத்தை சொல்ல, அவள் குஷி ஆகி விட்டாள்..”அப்பாடி.. ஃபைனலா மாமா சூப்பரா ஒரு திட்டம் போட்டுட்டார் போல, இந்த தடவ மிஸ்ஸே ஆகக் கூடாது”….
– தொடரும்…..
No comments yet.