கல்யாணம் முதல் காதல் வரை – 28

Shanmuha Sethuramachandran | 03 Feb 2026 | Share

                             28.

          தன்   எதிரே   நின்றிருந்தவனை  பளார்  என   ஒரு   அறை  அறைந்தான்  மாடசாமி. 

          “அண்ணே”

          “என்னடா   அண்ணே?  லட்டு   மாதிரி  கிடைச்ச   வாய்ப்பை   இப்டி   கோட்டை  விட்டுட்டு   வந்துட்டியே,   உன்னை  என்ன  செய்யலாம்   சொல்லு?”

          “அண்ணே , என்   மேல  எந்த   தப்பும்  இல்லண்ணே  . ஒரு   பைக்  காரன்  வந்து  திடீர்னு  அவளை  ஏத்திட்டு  போனதுக்கு  நான்   என்ன   செய்ய  முடியும்?” 

          “ம்க்கும்… இந்த   வாய்க்கு  ஒண்ணும்  குறைச்சலில்ல  . இந்த  வீரத்தை  செயல்ல காட்டிருந்தா   நீ   கில்லாடி.   சரி  விடு,  உன்னையும்   சொல்லி  குத்தமில்ல. அந்த  தேனுகா  மேல   ஆண்டவனுக்கு  ஏதோ  அபரிமிதமான  பாசம்   இருக்கு   டா.  ப்ரித்வியை   போட்ட   அன்னிக்கே   அவளுக்கும்   சேத்து  தான்  குறி  வச்சோம்.   அப்பயும்   மிஸ்   ஆகிருச்சு , இப்பயும்   மிஸ்   ஆகிருச்சு .அவ  ஆயுசு   கெட்டி”

          “அண்ணே ,  நீங்க  கோவிக்கலன்னா  நான்   ஒரு   யோசனை   சொல்லட்டுமா?” 

          “சொல்லுடா”   

          “பேசாம  அந்த   தேனுகா புருஷனைப்   போட்டு   தள்ளிடலாமா?”

           “ஏன்  டா?”

           “ஈசிண்ணே , இன்னிக்கு  காலையில  உங்களைப்    பாக்க   வந்த   முஸ்தஃபா  என்ன   சொன்னாரு?  தேனுகா  மேல  எங்க  வீட்டுப்   பையனுக்கு   பாசம்  அதிகம் , அவ  லவ்வர்   செத்ததுக்கு   நம்ம   தான்  காரணம்னு   ஒரு   குற்ற   உணர்வுல  அவளைக்   கல்யாணம்   பண்ணினாலும்  அவ   மேல  அன்பா  இருக்கான்னு  சொன்னாரா ?  இப்ப   நம்ம  அவளை  வெட்டுனா   அவ   புருஷன்  அடங்க  மாட்டான். நம்ம   மேல   கேஸ்  போடுவான்.   பொண்டாட்டி   போன  துக்கத்துல  நம்ம  மேல   கொலை  வெறில  இருப்பான்.  அப்போவும்  நம்ம   இந்த  மாதிரி  பயந்து  அவனை   தூக்க   ஸ்கெட்ச்  போடணும்.  அது   தலையை   சுத்தி   மூக்கை   தொடுற  வேலை.  அதுக்கு   பேசாம   ஜூனைத்தை  கொன்னுட்டா ,  நமக்காக  சாட்சி  சொல்ல வந்து   தான   இவன்   செத்தான்னு   தேனுகாவும்    புலம்புவா . அது   சாகுற  வரைக்கும்   அவளுக்கு  தண்டனை  தான். அது  மட்டும்   இல்லாம ,  நமக்கு   எதிரா  இருக்கிற   ஒரே   ஒரு   ஐ   விட்னசும்   இல்லன்னு   ஆகிரும் . ஒரே  கல்லுல  ரெண்டு   மாங்கா ,  என்னண்ணே?”   மாடசாமி , அந்த   அல்லக்கையை   ஆச்சரியமாக  ஒரு பார்வை   பார்த்தான். 

          ” டேய், உன்னை  நான்   மக்குன்னு   நினைச்சு   இவ்ளோ   நாள்   மட்டம்   தட்டிக்கிட்டு  இருந்தேன்.  ஆனா   நீ   வேற  மாரி   டா.  சூப்பர்  டா, நல்ல  ப்ளான்  தான்  இது  . அவனை   ரெண்டு   நாள்  க்ளோசா  ஃபாலோ   பண்ணு ,  அவனோட  அன்றாட  வேலைகளை   கவனி,  இந்த  ரெண்டு  நாள்லயே   ஏதாவது  நல்ல  சந்தர்ப்பம் வாய்ச்சா   என்   சம்மதத்துக்கு  அவசியமே  இல்ல  , முடிச்சிரு”   

          “சரிண்ணே ,அப்ப   நான்   வர்றேன்” 

         “எங்கடா   போற ?  இரு,   இந்தா  காசு.   எனக்கு   நல்ல  யோசனை  சொன்ன  உனக்கு   ஒரு   சின்ன  பரிசு” அந்த  அல்லக்கை ,  அந்த   ஐநூறு   ரூபாயை  வாங்கிக்   கொண்டு   சந்தோஷமாக  வெளியே   செல்ல,  மாடசாமி   ஒரு  நிம்மதி  பெருமூச்சு   விட்டான்…..

                       ************

            “அக்கா   என்ன   பண்றீங்க?”  

           “சும்மா  தான்.  வாட்ஸப்ல ஸ்டேட்டஸ்  பாத்துட்டு   இருக்கேன்,   நீ   என்ன  பண்ற?”  

           “மொட்டை   மாடிக்கு   போலாமா?  மழை  விழுற   மாதிரி   காத்து   சிலு  சிலுன்னு  அடிக்குது. ஜாலியா இருக்கும்கா”  

            “சரி   போலாம்,  ஆனா   யாராவது  பாத்துட்டா   திட்டா   மாட்டாங்களா?” 

           ” என்னக்கா   லூசு  மாதிரி   கேள்வி  கேக்குறீங்க?   நம்ம   என்ன  நிலாவுக்கா  போறோம்?  மொட்டை  மாடிக்கு  தான  போறோம்?  வாங்க”   ரஷிதா , தேனுகாவின்  கையைப்   பற்றி   இழுத்தாள்.   

            “இருடி,  லைட்  ஃபேன்லாம்  ஆஃப்  பண்ணிட்டுப்   போலாம் ”  எல்லா  ஸ்விட்ச்களையும்  ஆஃப்   செய்து  விட்டு,   இருவரும்    அறையை  விட்டு  வெளியேறி   நடக்க   ஆரம்பித்தனர்.   இரவு   பத்து  மணி   என்பதால் , எல்லோரும்  தூங்க  சென்றுவிட்டனர் .  வீடு  முழுக்க  லேசாய்  ஜீரோ   வாட்ஸ்   பல்ப்களின்   உறுத்தாத  நீல   நிற   வெளிச்சம் . தேனுகாவுக்கு  அந்த  வெளிச்சமும்,  ஆள்   அரவமற்ற  அமைதியும் ரசிக்கும்  படி  இருந்தது . மெல்ல  படிகளில்  ஏறினர். 

             “ரஷி”

            “அக்கா” 

            “இந்த  வீடு  யார்   ப்ளான்  பண்ணது? தாத்தாவா   இல்ல   இன்ஜினியரா?”

            “தாத்தா  தான்கா,   ஏன்?”

           “இல்ல , இங்க   இருக்குற  ஒவ்வொரு  அம்சமும்   ரொம்ப  அழகா   இருக்கு.  பின்னாடி   பெரிய   தோட்டம்,  அதுல  ரொம்ப   அழகா  ஒரு   ஊஞ்சல் . அதைக்  கூட  விடு ,  இந்த   ஜீரோ  வாட்ஸ்  லைட்ஸ்  கூட  பாரேன்,  அங்க   இங்கனு   தொங்காம   அழகா  சீலிங்ல   வச்சிருக்காங்க” 

           “தோட்டத்துல    ஊஞ்சல்   போட  சொன்னது    தாத்தா   இல்லக்கா , உங்க  ஹஸ்பெண்ட்   ஜூனைத்  மாமு  தான்”

            “ஓ !  அப்டியா?”  

           “என்ன  ஓ  ? இவ்ளோ   நேரம்  ஆகா  ஓஹோன்னு   புகழ்ந்துட்டு , இப்ப  அப்டியே  கம்முனு   ஆகிட்டீங்க?”   

           “ஒண்ணுமில்லடி   விடு”  

           “எங்க   மாமுவைப்  பத்தி   பேசக்  கூட  வேணாம்னு    இருக்கீங்களாக்கா? ஏன்கா அவரை   புரிஞ்சுக்கிறதுக்கு  முயற்சி  கூட  பண்ணாம   இருக்கீங்க?”  

           “ரஷி   இந்த   பேச்சை   விடு  , நான்  அன்னிக்கே   தெளிவா  சொல்லிட்டேன்.  நீ  என்னையும்   அவரையும்   சேர்த்து  வைக்க  ட்ரை   பண்ணாத , அது   முடியாது,  உனக்குத்   தான்   தேவையில்லாத   கஷ்டம்னு.    இது  தான்    மொட்டை   மாடி   கதவா?நைட்  சாவி வச்சு  பூட்டமாட்டீங்களா?’

          “பூட்டி   தான்கா   இருக்கும் , இப்ப  யாரோ   இருக்காங்கன்னு  நினைக்கிறேன், வாங்க”   அந்த  கதவை   தள்ளி   திறந்து, இருவரும்   வெளியே   சென்றனர்.   காத்து   ஆளையே   தூக்குவது  போல்  அடித்தது.

          ” வாவ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!”

         ” சொன்னேன்லகா  மொட்டை  மாடி  சூப்பரா    இருக்கும்னு?   எப்டி  இருக்குனு  பாருங்க ,  பிடிச்சுருக்கா?”

           “சூப்பரா    இருக்குடி..  ஆமா,, யாரோ  இருக்காங்கன்னு   சொன்ன?  அப்டி  எதுவும்  தெரியலயே,   யாரையும்  காணோம்?” 

             “அக்கா…   அங்க   பெரிசா   ரெண்டு   டேங்க்  தெரியுதா?”

              “ஆமா ” 

             “அங்க   ஒரு   ஸ்டோன்   பெஞ்ச்  இருக்கும்  . அதுல   தான்   நாங்க  போய்  உக்காருவோம் .அங்க  யாராவது  இருக்கலாம் , அதே   மாதிரி  வலது  பக்கமும்    ரோஜா  செடிகள்கு   நடுவுல   ஸ்டோன்  பெஞ்ச்   ஒண்ணு   இருக்கும்.

            “ரோஜா   செடியா?   வாடி   அங்க  போய்   பாக்கலாம்,   எனக்கு  செடிகள்னா  ரொம்ப   பிடிக்கும் . அதுவும்  ரோஜா  செடிகள்னா   ரொம்ப   ரொம்ப  பிடிக்கும்”  

           “ஓகேக்கா, வாங்க   போலாம்”  அவள்  முன்னே   செல்ல,  தேனுகா  பின்  தொடர்ந்தாள்.   அங்கு   ஏதோ  பேச்சுக்குரல்  கேட்க ,  இருவரும்  அங்கேயே  நின்றனர்.

           “என்ன   ஏதோ   பேசணும்னு  சொன்ன?   இப்ப   அமைதியா   இருக்க?”

          “சொல்றேன்ங்க,   இன்னிக்கு  சாயங்காலம்   கிச்சன்ல   ஒரு   பிரச்சனை வந்துச்சு.  நம்ம   ரஷியை   நசீமா  ரொம்ப காயப்படுத்திட்டா.  எனக்கு  மனசு  தாங்கல” 

          “அக்கா , எங்க   அம்மா   அப்பா  தான்”  ரஷிதா   கிசுகிசுப்பாய்   சொல்ல,

          ” சரி   வா,  நம்ம   இங்க   நிக்க  வேணாம்  , அந்த   பக்கம்  போலாம்”   

            “ஏன்கா?”

           “லூசு , அவங்களே  பாவம்  கீழ   ப்ரைவசி    இல்லாம    தனியா  பேசத்  தான்   இங்க   வந்திருக்காங்க.  அதை  நம்ம  ஏன்  கெடுக்கணும்?   வா”…..

           “சரிக்கா ,  நீங்க   அந்த   பக்கமா  இருக்குற   ஸ்டோன்   பெஞ்சுல  போய்  உக்காந்திருங்க.  நான்   கீழ   போய்  என்   ஃபோனை   எடுத்துட்டு   வந்துடறேன்” 

          “இப்ப   எதுக்குடி   ஃபோன்   உனக்கு?”  

          “அக்கா,   போட்டோ  எடுக்க  தான்”  

          “இந்த   இருட்டுலயா?”

           “ஆமா   ப்ளாஷ்   போட்டா  சூப்பரா  எடுக்கலாம்.    நீங்க   இருங்க , நான்  ஓடிப்  போய்   எடுத்துட்டு ,  ஓடி   வந்துருவேன்”

          “ம்ம்ம்  … என்னமோ  போ”

          “உங்க   ஃபோனையும்  எடுத்துட்டு  வந்துடவா   அக்கா?”

          “இல்ல டி   எனக்கு   வேணாம்,  அது  சார்ஜ்    ஏறட்டும்”

          “ஓகேக்கா”  ரஷிதா   படியை  நோக்கி  வேகமாக    ஓடினாள். அவள்  சென்றவுடன்,  மொட்டை   மாடியின்    இடது   பக்கத்தை  சுற்றிக்   கொண்டு,   அந்த   ஸ்டோன்   பெஞ்சை   அடைந்தாள்.   அவள்  அமரப்  போக,   அங்கு   வேறு   யாரோ  படுத்து   கொண்டிருந்தனர்  . உற்றுப்   பார்த்தாள்.  யார்   என   பிடிபடவில்லை.

           “ஹனி……என்ன   என்னை  அடையாளம்    தெரியலயா ? அப்டி  உத்து   உத்துப்   பாக்குற?”

           “ம்ம்ம்…. தெரியல  , உங்களை  நான்  எதுக்கு    தெரிஞ்சுக்கணும்?”  

           ” சரி    தெரிஞ்சிக்க   வேணாம்.  நான்  பேசுறதை   மட்டும்   கேளு”

           “ஓ!  அப்போ  நீங்க   தான்   ரஷிதா   கிட்ட   சொல்லி  , என்னை   இங்க  கூட்டிட்டு  வர    சொன்னீங்களா?” 

           “ப்ளான்   உண்மை  தான் . ஆனா  அது   என்னோடது    இல்ல   ரஷியோடது.  அவ  தான்  கொஞ்ச   நேரத்துக்கு   முன்னால   எனக்கு   கால்   பண்ணி,  மாடிக்கு  வாங்க,   நான்   தேனு   அக்காவை  கூட்டிட்டு  வர்றேன்.   நீங்க   அவங்க   கிட்ட  எல்லாத்தையும்   மனசு  விட்டுப்  பேசுங்கனு  சொன்னா . சரி   அவ   வார்த்தைக்கு  மதிப்பு   குடுக்கலாமேன்னு   நான்   மேல  வந்து   வெயிட்    பண்ணிட்டு   இருந்தேன்”  

          “அப்ப   ப்ளான்   பண்ணித்   தான்  என்னை   தனியா   விட்டுட்டு   அவ   கீழ    போனாளா ?  இருக்கு  அவளுக்கு”   

          “என்ன  ஹனி   நீயா   புலம்புற? எனக்கு  கேக்கல , கொஞ்சம்  சத்தமா” 

           “குட்   நைட்”  

         ” ஹனி   ஒரு   நிமிஷம்   இரு,   உன்னை  நான்   ஏன்   ப்ளாக்மெயில்  பண்ணி  கல்யாணம்  பண்ணிக்கிட்டேன்னு   இப்ப  உன்   கிட்ட   சொல்லியே   ஆகணும்.   நான்   சொல்லப்   போற   உண்மை   உன்   மனசை  அறுக்குற  அளவு   கசப்பானது.  அதனால  தான்   ஏன்   அதை   சொல்லி  உன்னை  நோகடிக்கணும்னு   இத்தனை   நாள்   பேசாம    இருந்தேன்.   ஆனா   இனிமேல்  என்னால   அப்டி   இருக்க   முடியும்னு  தோணல    ஸோ   கொஞ்சம்”…….

          ” ஏங்க   ப்ளீஸ் ,  இப்ப   என்   மனசு   முழுக்க   ப்ரித்வி   கேஸ்   தான்   இருக்கு.  அது   முடியட்டும் , அப்புறம்   உங்க  கதையை  கேக்குறேன்   சரியா?”  வேகமாக  மொட்டை  மாடி   கதவை   நெருங்கி  கதவை   இழுத்தவள்  , அதிர்ந்தாள் . கதவு  உள்  வழியாக   பூட்டப்பட்டிருந்தது.  

                                                    – தொடரும்….

               

  

          

         

       

            

            

      

 

    No comments yet.