கல்யாணம் முதல் காதல் வரை – 22

Shanmuha Sethuramachandran | 01 Feb 2026 | Share

                              23.

          “என்னது,   என்ன   சொன்னீங்க?”

        “எதிர்ல   தானே   இருக்கேன்,அப்புறம்  எப்டி   காதுல   கேக்காம   போகும்? ஓ!!!!! அதிர்ச்சியா?  சரி  சரி   திருப்பியும்  சொல்றேன்.  என்னால   உனக்கு  டிவோர்ஸ்  தர  முடியாது.   இப்ப   புரியுதா ?”  அவன்  சிரிக்க,   கோபத்தில்   நற   நறவென  பற்களைக்  கடித்தாள்   தேனுகா.

           “ஹலோ  சார் ,  நான்   லாயர்  அதை  மறந்துடாதீங்க,  நீங்க  டிவோர்ஸ்  தரலன்னா  என்னால   வாங்க   முடியாதுன்னு   மட்டும்  நினைச்சுடாதீங்க.   என்ன  வேணாலும்  செஞ்சு,   நான்   நினைச்சதை  முடிப்பேன்”

         “ஆல்  தி  பெஸ்ட்  ஹனி .  ஆனாலும்  ரொம்ப   கோபப்படாத,  அப்றம்  இந்த  வயசுலயே  ப்ளட்   பரஷர்  வந்துரும்”

          “என்ன   ஹனியா?”

          “ஆமா   தேனுகான்னா  தேன்  தானே? அதுனால   ஹனி.   எனக்கு  உன்   பேரை   சுருக்கமா   கூப்ட  பிடிக்கல,  அதான்   இப்டி  கம்ஃபர்ட்டபிளா   வச்சுக்கிட்டேன்”

           “என்னை   ஷார்ட்   நேம்  வச்சு  கூப்பிடவோ,   இல்ல   நிக்  நேம்   வச்சு  கூப்பிடவோ    உங்களுக்கு  எந்த  உரிமையும்   இல்ல   மிஸ்டர்  ஜூனைத்” 

           “என்ன   லாயர்   மேடம்?   நான்  உங்களை   கல்யாணம்   பண்ணி,  அதை  சட்டப்பூர்வமா  ரிஜிஸ்டரும்  பண்ணியாச்சு.  அப்புறமும்   என்ன   உரிமை   இருக்குன்னு  குழந்தை   மாதிரி   கேக்குறீங்க”   அவன்  தன்னிடம்  வாய்   ஓயாமல்   பேசிக்  கொண்டே   இருந்ததை  தேனுகாவால்  பொறுக்க   முடியவில்லை.  

         “நான்  வீட்டுக்குப்  போறேன். எனக்கு   சாப்பாடு   வேணாம் ,  பசிக்கல.   ரொம்ப  லேட்   ஆனதால  என்   பசியே  போயிடுச்சு”   எழுந்து   நின்று   அவள்  சொல்ல,  ஜூனைத்திற்கு  அடக்கி  வைத்திருந்த  கோபம்  மீண்டும்  எட்டிப்   பார்த்தது.

          “சரி   போ , நீ   தாராளமா  போலாம். உன்னை   நான்   தடுக்கல . ஆனா   நான்   சாப்பிட்டு   தான்  வருவேன் . ஆல்ரடி   நான்  சாப்பிடுற   நேரத்தைத்  தாண்டி   ரொம்ப   லேட்   ஆகிருச்சு” 

         “லூசா  நீங்க?  இந்த   நேரத்துல   நான்  மட்டும்   எப்டி   தனியா  போறது?   அதுவும்  இது   எந்த   இடம்னே  எனக்கு   தெரியல”

         “தெரியுதுல்ல?  அப்போ   உன்  லொட  லொட   வாயை   மூடிக்கிட்டு   உக்காரு.  அதோ   வீராசாமி   அண்ணன்  ப்ளேட்ஸோட    வர்றாரு  , நல்லா   இருக்கும்  இங்க  சாப்பாடு,   சாப்பிட்டுட்டு   போலாம்”

         “மேடம்   என்ன?   ஏன்   நிக்குறீங்க?”

         “வாஷ்   பேசின்   எங்க   இருக்கு?”

         ” அதோ , அந்த   லெப்ட்   சைட்  மேடம்” வீராசாமி   வழி   சொல்ல,  தேனுகா  கை  கழுவச்   சென்றாள்.  அவர்   கொண்டு  வந்த   மூன்று   தட்டுகளையும்  டேபிளில்  வைத்து  பரப்பி  விட்டு ,   ஜக்கில்  இருந்த  தண்ணீரை  டம்ளரில்   ஊற்றினார்.

          “தாங்க்  யூ   அண்ணா”

         “அட   என்ன   சார்,   இதுக்குப்  போயி  நன்றிலாம்   சொல்லிக்கிட்டு?  என்  வேலை  இதானே   சார் .  எப்ப  சார்   கல்யாணம்  ஆச்சு  ? சொல்லவே   இல்ல  பாத்தீங்களா”

         “ஒரு   வாரம்  ஆகப்   போகுதுண்ணா. ஐயோ !!  சொல்லக்   கூடாதுன்னுலாம்  ஒண்ணும்   இல்ல.   நிறைய  ப்ராப்ளம்ஸ்கு  மத்தியில   நடந்ததால  தான்”…..

        “புரியுது  புரியுது   சார் , நீங்க  முஸ்லிம்,  அவங்க   ஹிந்து   போல   தெரியுது.   அதனால   பிரச்சனை  வராம   இருந்தாத்  தான்  அதிசயம்.  எல்லாம்   சரி  ஆகும்  சார்.   கடவுள்   இருக்கான், அவன்  எல்லாத்தையும் பாத்துக்கிருவான், நீங்க  வருத்தப்படாதீங்க”

         ” சரிண்ணா , நீங்க   சாப்டீங்களா?”

          “இனி  தான்  சார்  . சரி   கீழ  டேபிள்ல  ஆள்   வந்துட்டாங்க,   நான்   அங்க   போய்  கவனிக்கிறேன்   சார்” 

           “சரிண்ணா”  வீராசாமி   அண்ணன்  சென்று   விட,   கை  கழுவி  விட்டு  வந்து அவன்  எதிரே   அமர்ந்தாள்   தேனுகா.

         “வெஜ்   மோமோஸ்  சாப்டறியா? இந்த  கடையில   ரொம்ப   சூப்பரா   இருக்கும்”

          “இல்ல   வேணாம்”  அது  அவளுக்குப்  பிடித்த   வகை   தான்   என்றாலும் , அவன்  சொல்வதால்  அதை   செய்யக்  கூடாது  என்று   மறுத்து  விட்டாள்.

          “சரி”  பின்   இருவரும்  எதுவும்  பேசிக்  கொள்ளாமல்   சாப்பிட்டு   முடித்தனர்.  கை  கழுவி விட்டு  வந்து,   தன்  பர்சைத்  திறந்தான்   ஜூனைத். 

         “வேணாம்”  அவசரமாக  அவனைத்  தடுத்தாள்   அவள்

         “என்ன   வேணாம் ?”

        “நானே   பே   பண்ணிக்கிறேன்”

         “பர்ஸ் ?”

        “நோ   நீட்.   அதான்   ஃபோன்   இருக்கில்ல?  கீழ   போலாம் , கேஷ்  கவுண்ட்டர்ல   கூகுள்  பே  பண்ணிடறேன்”

          “சரி ”   மீண்டும்  அவன்   தன்   பர்சை  திறக்க ,  ” ஏங்க,   இப்ப  எதுக்கு  பணம்  எடுக்குறீங்க ?  அதான்  நான்  காசு  குடுக்குறேன்னு   சொல்றேன்ல?  யார்  என்ன   சொன்னாலும் ஒரு  தடவையிலயே  கேக்க  மாட்டீங்களா ?  உங்க  காசுல  சாப்பிடணும்னு   எனக்கு   அவசியம்   இல்லை,  சே” …….

         “பைத்தியம் ,  நான்   பீடா   சாப்பிடப்  போறேன்.   அதைத்   தான்   என்   பர்ஸ்ல  தேடிட்டு   இருக்கேன்.   நீ   தான்  பே  பண்ணிக்கிறேன்னு  சொல்லிட்ட,  திருப்பி  நான்   ஏன்  காசு   எடுக்கப்  போறேன்?  வா  வா ,  போலாம்”   இருவரும்  படிகளில்  இறங்கி  கீழே  வந்தபோது,   கடை  கிட்டத்தட்ட   காலியாகி  விட்டிருந்தது.  பணம்  செலுத்திவிட்டு   கிளம்பினர்.   வாசல்  அருகில்   வந்து   நின்றபோது   அவளைத்  தடுத்தான்   ஜூனைத்.

           “நீ    இங்கயே   இரு,   நான்   காரை  திருப்பிட்டு   வர்றேன்”

          “ம்ம்ம்ம்”   காரில்  ஏறி  அமர்ந்து , அந்த   சாலையின்   எல்லை   வரை   போய்விட்டு  யூ  டர்ன்   அடித்து  வந்து   அவளருகில்  நிறுத்தினான்.  முன்  கதவைத்  திறந்து  வைத்தான்.”வா   உள்ளே” அந்த  கதவை  சார்த்திவிட்டு ,  பின்   பக்கக் கதவைத்  திறந்துகொண்டு   ஏறினாள்.  காரை  கிளப்பி ,  வேகமாக   விரட்டினான். 

          ” ஜூனைத்”

           “எஸ்” 

         ” உங்க   கிட்ட   கொஞ்சம்   பேசணும்”

          ” பேசு ” 

          “ஏன்  எனக்கு  டிவோர்ஸ்  தர  முடியாது அப்டின்னு   சொன்னீங்க?   என்னை  எப்டியாவது   சமாதானம்   செஞ்சு,   சரி  பண்ணிடலாம்னு   நினைக்கிறீங்களா?”

          “இல்ல “

         “அப்புறம்   எதுக்கு   சொன்னீங்க  உனக்கு   நான்  விவாகரத்து  குடுக்க  மாட்டேன்னு?   பேசிடலாம்  ஜூனைத்,  எல்லாத்தையும்   இப்பயே.  சும்மா  இந்த  விஷயத்தைப்   போட்டு   இழு  இழுன்னு   இழுத்துட்டு   இருக்கிறதுல   எனக்கு  விருப்பம்   இல்ல.   உங்க  ஸ்டாண்ட்  என்னனு   நான்   தெரிஞ்சுக்கணும்” 

        “அதை   சொல்றதுக்குத்   தான்,   இந்த  விஷயத்தைப்   பத்தி   பேசறதுக்குத்  தான்  அப்போவே  உன்   கிட்ட   டைம்  கேட்டேன். நீ   தான்   குடுக்க   இஷ்டமில்லன்னு  சொன்ன அப்புறம்  எப்டி   நான்   பேசுவேன்?”

        “ஆண்டவா!!!!!!!!   இந்த  மக்கு   கிட்ட  என்னை  ஏன்  கோர்த்து  விட்ட?” வாய்க்குள்  முனகிக்   கொண்டாள்.  “சரிங்க , இப்ப டைம் குடுக்குறேன்.  பேசுங்க”

          “தேனுகா , நீ  ஏன்  உன்னால  எனக்கு  நல்ல   மனைவியா   இருக்க  முடியாதுன்னு  சொன்னஅதுக்கு  முதல்ல  பதில்  சொல்லு”

          “இதுல   நான்   தனியா   பதில்  சொல்ல   என்ன   இருக்கு?   உங்களுக்கே  தெரியும் , பிகாஸ்  ஐ   லவ்  ப்ரித்வி”

          “அது   சரி   தான்மா,   இப்போ   தான்  அவர்   இல்லயே,   இறந்துட்டாரே.   இல்லாத  ஒருத்தரை   நினைச்சுக்கிட்டே   வாழ்ந்து  உன்  லைஃபை  நீ   ஸ்பாயில் பண்ணிக்கிட   போறியா?   இங்க   பாரு   தேனுகா,  நீ  நல்லா   இருக்கணும்.   உன்   மேல   உள்ள  அக்கறையில   தான்   நான்   இதெல்லாம்  சொல்றேன்.   இப்ப  கொஞ்ச  நாளுக்கு  எல்லாம்   நல்லா  தான்   இருக்கும் .  வருஷங்கள்   போகப்   போக,  உன்  வாழ்க்கையில   வெறுமை  வந்து  அடையும். அப்போ   திரும்பிப்   பார்த்தா   உனக்குனு  யாருமே   இருக்க  மாட்டாங்க.  இறப்புங்குற  விஷயம்  விதி   சம்பந்தப்பட்டது.   உன்  காதலன் நீண்டகாலம்  வாழ  முடியாதுன்னு   விதி   இருந்துருக்கு”

         “ஸ்டாப்   இட்…..   நீங்க   சொல்றது  எல்லாம்   சரி ,   ரொம்ப   நியாயமான   பேச்சு   தான். ஆனா   ப்ரித்வி   மரணத்தை   சாதாரண   விபத்து  கேட்டக்ரிலயோ,  இல்ல  விதி   கேட்டக்ரிலயோ   சேர்க்காதீங்க.  அது   விதி   இல்ல,  உங்களால   உங்களால  மட்டும்  தான்  அவன்   செத்துப்   போனான். நீங்க   நடந்ததை   எல்லாம்   என்கிட்ட  சொல்லாம   இருந்திருந்தா  கூட  பரவாயில்ல .  ஆனா   எல்லாமே  சொல்லி, என்னை   மிரட்டி   கல்யாணமும்  பண்ணுவீங்க,   நான்   எல்லாத்தையும்  மறந்துட்டு  உங்களையும்  உங்க  ஃபேமிலியையும்  ஏத்துக்கணுமா?  அது  எப்டி   என்னால   முடியும்?”  அவள்  அலற,   புன்னகையுடன்   அவளைத்   திரும்பிப்  பார்த்தான்   ஜூனைத்.

        ” இது , இதைத்   தான்   நான்   எதிர்  பார்த்தேன்.   உங்க  லவ்வர்  இறந்து  போக யார்    காரணமோ  அவன்   கூட  வாழ   உனக்கு   பிடிக்கல   அது  தான?” 

         “ஆமா,  அதுவும்   ஒரு   காரணம்.  அது  மட்டுமில்ல,  நீங்க   என்னைக்  கல்யாணம்  பண்ணினது   ஒரு   பச்சாதாபத்துல  தான்.  அதுவும்  எனக்குப் பிடிக்கல . இதுக்கு  மேல   நீங்க   எனக்கு   எந்த   க்ளாரிஃபிகேஷனும்  குடுக்க  வேணாம்.   பேசாதீங்க , எனக்கு  பிடிக்கல   பிடிக்கல”

        “சரி , வேற   என்ன   பிடிக்கல?”  அவன்  கூலாகக்   கேட்க,   தேனுகாவின்  கோபம்  பன்மடங்கு   கூடியது.

        “ஜூனைத்தைப்  பிடிக்கல,   ஜூனைத்   சார்ந்த   எதுவுமே   பிடிக்கல, அவ்ளோதான்”  தன்னை  மீறி   கத்தியவள் , பின்பு   பெருகும்  கண்ணீரோடு   தலைகுனிந்தாள்.  லேசாக  விசும்பல்   சத்தம்   கேட்டது.  ஆனால்  ஜூனைத்   என்ன   ஏது   என   ஒன்றும்  கேக்கவில்லை.  அழட்டும்   என   விட்டு  விட்டான் . காரை  அந்த   மரத்தடியில்  வாகாக   நிறுத்தி  விட்டு,   சீட்டை   கொஞ்சம்  பின்னால்   தள்ளி ,  அவளை   பார்த்தவாறு   அமர்ந்துகொண்டான்.   ஒரு   பத்து  நிமிடங்கள் கழித்து ,சிவந்த  கண்களைத்   துடைத்துக்கொண்டு  மெல்ல நிமிர்ந்தாள்   தேனுகா.

       “என்னால  உங்க   கூட   வாழ  முடியாது.  அப்டி   பிடிக்காத   ஒருத்தர்   கூட   பல்லைக்  கடிச்சுக்கிட்டு   வாழணும்னு  அவசியமும்  இல்ல .டிவோர்ஸ்  தான்   இதுக்கான  ஒரே  தீர்வு, சரியான  தீர்வும் கூட எல்லாத்தையும்   நானே  பாத்துக்குறேன் . கொஞ்சம்   ஃபார்மாலிட்டீஸ்லாம்   முடிஞ்ச  பிறகு,  ஒரு  பேப்பரை  எடுத்துக்கிட்டு   வருவேன் .அதுல  நான்   காட்டுற   இடத்துல   ஒரு   சைன்,  ஒரே  ஒரு  சைன்   போட்டுட்டா  போதும் , உங்க   வழிக்கு   நான்   வரவே  மாட்டேன். ப்ளீஸ் ,,,,, கொஞ்ச   நேரத்துக்கு  முன்னாடி   என்   மேல   உங்களுக்கு   அக்கறை   இருக்குன்னு   சொன்னீங்க,  அது   உண்மையா   இருக்கிற   பட்சத்துல  எனக்காக   இதை   மட்டும்   பண்ணுங்க  ஜூனைத் .  ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”….. கை  எடுத்து   கும்பிட்டாள்   தேனுகா.

           “சரி   நீ   பேசி   முடிச்சுட்ட ,  நானும்  ஒரு  விஷயத்தை   சொல்லிக்கிறேன்.  இப்ப   இதே   ரோட்ல   நேரா   போய்  லெஃப்ட்   சைட்   கட்டானா  ஒரு   ஸ்கூல்  வரும்  , அதுக்கு   ரைட்ல   ஒரு   சந்து  போகும்  . அதுலயே   நேரா   போய்கிட்டே  இருந்தா,  ஒரு   பெரிய  வீடு   வரும்.  அதன்  வாசல்ல  மாஷா  அல்லாஹ்னு   ஒரு  போர்ட்    இருக்கும்.   அது   தான்  இனிமே  உன்   வீடு.   அங்க   இருக்குறவங்க  தான்  உன்   மனுஷங்க  . அங்க   தான்   இனி  உன்  மிச்ச  வாழ்க்கை .  டிவோர்ஸ்லாம்  குடுக்கவே  முடியாது .  அதை  நல்லா  மண்டைல  ஏத்திக்க. என்னை   பேச   விட  மாட்டேங்குற,  அதனால  நானும்   உன்னைப்   பேச  விடமாட்டேன்.  என்னைப்   பிரிய   உன்னால  என்னென்ன வேலைகள்   செய்ய   முடியுமோ,  செஞ்சுக்க .ஆனா   என்னை   ஜெயிக்கவோ,  இல்ல  என்  மனசை   மாத்தவோ,  உன்னால  முடியவே முடியாது”   தெளிவாகச்   சொல்லிவிட்டு  காரை  கிளப்பினான்   ஜூனைத்.   

          

        

 

       

        

      

   

             

    No comments yet.