ஒரு நாள் பிற்பகலில், மதிய உணவை சாப்பிட்ட பின், ராகுல் மற்றும் சுமா அந்த விசாலமான தோட்டத்தில் மெதுவாக நடந்து சென்ற போது, ஏதோ ஒன்று திடீரென்று சுமாவின் கவனத்தை ஈர்த்தது. ஒரு செடியின் இலைக்கு அடியில் ஏதோ சிரமப்படுவதை அவளால் பார்க்க முடிந்தது. அவள் என்னவென்று எட்டிப் பார்த்தாள். ஒரு மஞ்சள் நிற பட்டாம்பூச்சி அதன் கூட்டிலிருந்து வெளியே வர போராடுவதை அவளால் காண முடிந்தது. அது ஒரு சங்கடமான சூழ்நிலை. கால்கள் மற்றும் இறக்கைகள் வெளிவந்த நிலையில், தலை மற்றும் பிற பாகங்கள் வெளியே வர முடியவில்லை.
ராகுல் மெதுவாக அதனை பரிசோதித்தான். கூடும், பட்டாம்பூச்சியும் இலையிலிருந்து பிரிக்கப்பட்டு தரையில் விழுந்தன. ஆனால் தலை இன்னும் கூட்டிற்குள் இருந்தது. “தயவு செய்து ஏதாவது செய்யுங்கள். அது இறந்து போவதை நான் விரும்பவில்லை.” சுமாவின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. அவள் படபடப்புடன் அவனைப் பார்த்தாள்.
“பயப்படாதே” இந்தப் பிரச்சினையை தீர்க்க ஒரு வழியை ராகுல் யோசித்தான். தனது விரல்களை பலத்துடன் பயன்படுத்தினால், பட்டாம்பூச்சி துண்டுகளாக உடைந்து அதன் உடலில் இருந்து இறக்கைகள் பிரிந்து விழக்கூடும். பட்டாம்பூச்சியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
“பட்டாம்பூச்சியைக் காப்பாற்ற இரண்டு வழிகள் உள்ளன”
“என்ன?” சுமா வினவினாள்.
“உதவி செய்ய முயற்சி செய்யலாம் அல்லது அதன் விதிப்படி நடக்கட்டும் என்று நாம் போய்விடலாம்.”
“ஆனால் நாம் போய்விட்டால் பட்டாம்பூச்சி இறந்துவிடும்.”
ராகுல் அந்தப் பட்டாம்பூச்சியைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டு, தனது ஆள்காட்டி விரலால் மிகவும் மெதுவாகத் தடவிக் கொடுத்தான்.
பட்டாம்பூச்சியின் தலை காயமின்றி வெளிப்பட்டது. ஆனால், அதன் சிறகுகள் கூட்டிற்குள் அடைப்பட்டிருந்தன. பட்டாம்பூச்சியால் அதன் இறக்கைகளை விரிக்க முடியவில்லை. ராகுலின் உள்ளங்கையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தது.
சுமா பட்டாம்பூச்சியை தனது கையில் எடுத்து அருகிலிருந்த செடியின் அகன்ற இலையில் வைத்தாள். இருவரும் பத்து நிமிடங்கள் அங்கேயே நின்றார்கள்.
இதமான காற்று பட்டாம்பூச்சியின் சிறகுகளை உலர்த்தியது, அது மெதுவாக அதன் இறக்கைகளை விரித்து பறந்து புல்வெளி மீது இறங்கியது. இரண்டு நொடிகளில், மீண்டும் அது மேலே பறந்து, மணம் நிறைந்த ரோஜாவின் இதழ்களின் மீது அமர்ந்தது. சுமா மகிழ்ச்சியுடன் புன்னகைத்தாள்.
No comments yet.