இரக்கமற்று இராப்பொழுதுகளிலும்
இம்சிக்கிறாய்…
உறக்கம் கெட்டு உன் நினைவுகளோடு
கெஞ்சி கேட்கிறேன்
இன்னும் கொஞ்சம் தூங்கிக்கொள்கிறேனே…
உதடு குவித்துகாற்றின் வழி
கள்ளத்தனமாய் முத்தம் நூறு
அனுப்புகிறாய்…
தப்பி பிழைக்க வழியேதும் இல்லாமலே
அத்தனையும் உண்டு களித்து
உனக்குள் உருக்குலைந்து கிடக்கிறேன்
மொத்தமாய் நான்…
பேசி தீர்க்க ஆவல் இருக்கையில்
மௌனம் கொள்வான்…
மௌனம் கொண்டு பிணக்கில் இருக்கையில்
முத்தம் வைத்து மொத்தமாய் கொல்வான்…
இருள் பூசிக்கொள்ளும் வானம்
உன்னையும் என்னோடு
பூசிக்கொள்ள சொல்லும் தேகம்
நீள்கின்ற நேரம்
வீழாத மோகம்
கலையாது வேண்டும் இத்தியானம்…
மெல்ல தலையசைத்து
கைகளில் கரிசனம் கோர்த்து
தலைகோதி நீ கேட்கையிலே
ஆதிமுதல் அந்தம் வரை
மறைப்பதற்கு ஏதுமில்லை…