‘கவிதை’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு. திசை சங்கர்
கவிதை
சுந்தரியோடு சேர்ந்து கேன்டீனில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ரமேஷைப் பார்த்ததும்,
அழுதுகொண்டே கல்லூரி வாசலை விட்டு வெளியேறினாள், செல்வி.
“செல்வி! செல்வி! நில்லு.
ஏன் இவ்ளோ வேகமா போற?
உன்கிட்ட ஒரு விஷயம்
சொல்லணும்” என்றபடி மூச்சிரைக்க ஓடி வந்தான், அகிலன்.
அவள் அழுது கொண்டிருப்பதைக் கவனித்த அகிலன்,
அவளின் கன்னம் தொட்ட கண்ணீரைத் தன் குட்டைக் கையால் துடைத்தான்.
“ஏன் யாருக்குமே என்ன பிடிக்க மாட்டேங்குது?”
“அப்டிலாம் சொல்லாத செல்வி, உன்னை எல்லோருக்கும் பிடிக்கும்.
நீ எதுக்கும் கவலப்படாத,
ரமேஷ் இல்லன்னா ஒரு சுரேஷ்”
ஆறுதல் வார்த்தைகளுக்கு இடையே அவளது பூவிரல்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான், அகிலன்.
அந்த விரல்களின் பிடியில்
தந்தையின் வெப்பம் உணர்ந்த செல்வி, உதறி விட மனமில்லாமல்
தன் உள்ளங்கை வேர்வையை அவனது உள்ளங்கையில் படரவிட்டாள்.
மௌனம் பேசிக்கொண்டு
இருவரும் விரல்களைக் கோர்த்தபடியே பேருந்தில் ஏறினார்கள். ஒரு புல்லின் மேல் பனித்துளி போல் அவன் தோளின் மேல் சாய்ந்து கிடந்தாள்.
திடீரென…
“ஆமா நீ ஏதோ ஒரு விஷயம் சொல்லணும்னு சொன்னியே”
ஆ…அது வந்து…
“ஒரு கவிதை எழுதி இருக்கேன் படிச்சு பார்த்து, எப்படி இருக்குன்னு சொல்லு” என்று பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த பேப்பரை நீட்டினான்..
அதில்
“எல்லோருக்கும் காதல் பிடித்திருக்கிறது
ஆனால், காதலுக்கு ஒரு சிலரை மட்டுமே பிடித்திருக்கிறது இப்போதைக்கு நீயும் நானும்”
அந்தக் காகிதத்தின் ஓரத்தில் “ஐ லவ் யூ” என்றும் எழுதப்பட்டிருந்தது.
படித்து முடித்த அவள் ஒன்றுமே சொல்லவில்லை. மௌனமாக இருந்தாள். இருவரும் பேருந்தை விட்டு இறங்கி அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.
ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில்
அவளின் பதிலுக்காக வாட்ஸ் அப்பை திறந்து வைத்தபடி தூங்காமல் காத்திருந்தான். சரியாக சாமம் 1:43 மணிக்கு காதில் விழுந்தது ஒரு நோட்டிபிகேஷன் சத்தம்…
தூக்கக் கிறக்கத்தில் வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்தான் அகிலன்.
அதில்
“எல்லோருக்கும் காதல் பிடித்திருக்கிறது
ஆனால், காதலுக்கு ஒரு சிலரை மட்டுமே பிடித்திருக்கிறது இப்போதைக்கு நீயும் நானும்”
பாவம்… சந்தோசம் வெகு நேரம் நீடிக்கவில்லை.
மகிழ்ச்சியின் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த அகிலனின் கனவில் நீர் வாரி இறைத்து விட்டாள், அம்மாக்காரி.
கனவைக் கலைத்த அம்மாவைத் திட்டிக்கொண்டே அவசர அவசரமாய் கல்லூரிக்குக் கிளம்பினான்.
கேன்டீனில் டீ ஆர்டர் செய்துவிட்டு எதார்த்தமாகத் திரும்பிப் பார்த்தான். கனவுக்கு மாறாக செல்வியும் ரமேஷும் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“டீ”யைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு,
கடைசி டேபிளில் சோகமாய் அமர்ந்திருந்த சுந்தரியிடம் கடிதத்தைக் கொடுத்தான்…
****முற்றும்****